உத்தர பிரதேசத்தில் 47 வயதான அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது 13 வயது மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


47 வயது ஆசிரியரின் காதல் கடிதம்:


உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கிராமத்தில் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில் சுற்றியுள்ள கிராம மக்களின் குழந்தைகள் அந்த உயர்நிலைப்பள்ளிக்கு சென்றுதான் தங்கள் கல்விக்கான வளர்ச்சியை பெறுகின்றன.


இந்தநிலையில், அப்பள்ளியில் படித்து வரும் 8ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவருக்கு ஹரி ஓம் சிங் சென்ற 47 வயதான ஆசிரியர் ஒருவர் காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 


படித்ததும் கிழிக்கவும்:


அந்த கடிதத்தின் முதல் வார்த்தையே படித்தவுடன் கிழித்துவிடவும் என்ற வடிவேல் காமெடி இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, அந்த காதல் கடிதம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து, மாணவியின் பெற்றோர்கள் ஆசிரியர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் காரணமாகவே இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 


ஆசிரியர் எழுதிய கடிதத்தில், நான் உன்னை மிகவும் விரும்புகிறேன். விடுமுறை நாட்களில் உன்னை எவ்வளவு மிஸ் செய்தேன் என்று எனக்கு மட்டுமே தெரியும். உனக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேசு. அரையாண்டு தேர்வு கால விடுமுறை விடுவதற்கு முன்பு தனியாக உன்னை ஒருமுறை சந்தித்து பேச வேண்டும். உண்மையாகவே நீ காதலித்தால் கண்டிப்பாக வருவாய். நீ என்னை விரும்பாவிட்டாலும் எப்போதும் உன்னை நான் காதலிப்பேன்” என எழுதியுள்ளார். தொடர்ந்து, இந்த கடிதத்தை நீ படித்துவிட்டு, அதை யாரிடம் காட்டாமல் கிழித்து எறியும்படி மாணவியிடம் கூறியுள்ளார். 


கொலை மிரட்டல்:


காவல்துறையினருக்கு புகார் அளிப்பதற்கு முன்பு, மாணவியின் தந்தை ஆசிரியரை அணுகி, இதுபோன்ற செயலைச் செய்ததற்காக மன்னிப்புக் கேட்கும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் மன்னிப்பு கேட்க முடியாது. இந்த விஷயம் மட்டும் வெளியே தெரிந்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தியதாகவும், அவர் சிறுமியை கடத்தி சென்றுவிடுவேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து வேறு வேறு எண்களில் இருந்து அழைத்து, மாணவியின் தந்தையை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுமுள்ளார். இதையடுத்தே மாணவியின் தந்தை இந்த வழக்கு தொடர்பாக சதர் கோட்வாலி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். 


இதுகுறித்து மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரி கவுஸ்துப் சிங் கூறுகையில், “இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அறிக்கை கோரப்பட்டுள்ளது. ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


மறுபுறம், ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அனுப் மிஸ்ரா கூறுகையில், குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சங்கம் முடிவெடுக்கும் என தெரிவித்தார். 


பெண்களுக்கு எதிரான வன்முறைகள்:


கடந்தாண்டு தேசிய தலைநகர் டெல்லியில் தினமும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நாட்டின் பாதுகாப்பற்ற பெருநகரமாக டெல்லி திகழ்வதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 13,892 வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன. இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 40% அதிகமாகும். அந்த ஆண்டு, 9,782 வழக்குகள் பதிவாகியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் 19 பெருநகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் 32.20 சதவீதம் ஆகும். 


டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.


கடந்த 2021ஆம் ஆண்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், கடத்தல் (3948), கணவர்களால் கொடுமைப்படுத்துதல் (4674) மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை (833) ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி அதிக எண்ணிக்கையில் உள்ளது. 


டெல்லியில் 2021 ஆம் ஆண்டில் சராசரியாக தினமும் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டில், டெல்லியில் பெண்களுக்கு எதிராக 13,982 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 19 பெருநகரங்களில் உள்ள மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 43,414 ஆகும்.


2021 இல், தேசிய தலைநகரில் 136 வரதட்சணை மரண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 19 பெருநகரங்களில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 36.26 சதவீதமாகும். அனைத்து பெருநகரங்களிலும் மொத்தம் 8,664 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில், பெண்கள் கடத்தல் மற்றும் கடத்தல் தொடர்பாக 3,948 வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன.


2021 ஆம் ஆண்டில், போக்சோ சட்டத்தின் கீழ் 1,357 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டில் 833 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இது பெருநகரங்களில் மிக அதிகமாகும்.