அறிவைப் பகிர்வதற்கும், கூட்டு செயல்பாடுகளை உருவாக்குவதற்கும், இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ எனப்படும் மருந்து ஒழுங்குமுறை ஆணையங்களின் 19ஆவது சர்வதேச மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா சிங் படேல் கூறியுள்ளார்.


உலக சுகாதார அமைப்பை பாராட்டிய மத்திய அமைச்சர்:


டெல்லியில் இன்று (16.10.2024) நடைபெற்ற மருந்து ஒழுங்குமுறை அதிகாரிகளின் 19-வது சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய அவர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகள், ஒழுங்குமுறை நடைமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.


புதிய மருத்துவ சோதனை விதிகள் -2019, மருத்துவ சாதன விதிகள் 2017 ஆகியவை மருத்துவ பரிசோதனையில்  உலகளாவிய எதிர்பார்ப்புக்கும் சர்வதேச நடைமுறைகளுக்கும் இணையாக அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.


பல்வேறு நாடுகளின் ஒழுங்குமுறை அமைப்புகளை மேம்படுத்துவதில் உலக சுகாதார அமைப்பின் முயற்சிகளைப் பாராட்டிய அனிப்பிரியா படேல், ஒத்துழைப்பு, கலந்துரையாடல், ஆகியவை மிகவும் முக்கியமானது என்றார்.


500 மில்லியன் மக்களுக்கு தரமான மருத்துவம்:


இந்த துறைகளில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் மத்திய அமைச்சர் எடுத்துரைத்தார். ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் 500 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தரமான சுகாதார சேவை கிடைப்பதை உறுதி செய்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.


 






ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய நித்தி ஆயோக்கின் சுகாதாரப் பிரிவு உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், வாழ்க்கைத் தரத்தையும்,  வாழ்க்கை முறையையும் தரமான மருந்துகள் மேம்படுத்துகின்றன என்று கூறினார்.


இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் சுகாதாரத்தின் எதிர்காலம் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் என்று கூறிய அவர், இந்தியா டிஜிட்டல் சுகாதார சேவைகளுக்கு வலுவான முக்கியத்துவம் அளித்து வருவதாகக் குறிப்பிட்டார்.