மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 13 மாதங்களே உள்ள நிலையில், இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.


அதன் தொடக்கமாக, நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, திரிபுராவுக்கு பிப்ரவரி 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதற்கான தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. 


மும்முனை போட்டி:


கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக கருதப்பட்ட மாநிலம் திரிபுரா. 25 ஆண்டுகாலமாக கம்யூனிஸ்ட்கள் ஆட்சி நடத்தி வந்தனர். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில்தான் அவர்களை வீழ்த்தி பாஜக ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியை முதல்முறையாக தோற்கடித்து பாஜக ஆட்சி அமைத்தது. 


தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்திட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இந்த முறையும் களத்தில் இறங்கியது. 60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் தனித்து களம் காணும் பாஜக பல சவால்களை எதிர்கொண்டது. பிரதான எதிர்கட்சிகளாக உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. 


போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது முடிவுகளிலும் எதிரொலித்துள்ளது. பாஜக கூட்டணி 30 தொகுதிகளிலும்  காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி 16 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.


ராஜகுடும்பத்தின் வாரிசு:


இவர்களை தவிர்த்து முக்கிய தலைவராக உருவெடுத்திருப்பவர் பிரத்யோத் பிக்ரம் மாணிக்ய தேவ் வர்மா. பழங்குடி மக்களுக்கு என தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருபவர். 


திப்ராலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் தேவ் வர்மா, நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கிங் மேக்கராக உருவெடுப்பார் என அரசியல் வல்லுநர்கள் கருதியிருந்தனர்.


அதற்கு ஏற்றார் போல், இந்த தேர்தலில் தேவ் வர்மாவின் திப்ரா மோதா கட்சி, 13 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. திரிபுரா ராஜ குடும்பத்தை சேர்ந்த தேவ் வர்மா, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்தவர். 


திப்ரா மோதா கட்சியை தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். பழங்குடி மக்கள் மத்தியில் இவரின் பிரச்சாரம் எடுபட்டுள்ளது என்பது இன்றைய முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.


பழங்குடி மக்கள் மத்தியில் செல்வாக்கு:


மாநில மக்கள் தொகையில் 32 சதவிகிதத்தினர் பழங்குடி மக்கள். வங்கதேசம் உருவான பிறகு, கிழக்கு வங்கதத்தில் இருந்து வரும் அகதிகள் காரணமாக பழங்குடி மக்கள் முக்கியத்துவத்தை இழந்து வருவதாக பிரச்சாரம் செய்து வந்தார் தேவ் வர்மா. இது, அவர்களின் உணர்வை தூண்டும் விதமாக இருப்பதால் அது வாக்காக மாறலாம் என கூறப்பட்டது.


இந்த தேர்தலில், மாநிலத்தில் உள்ள 20 பழங்குடியின மக்களுக்கான ரிசர்வ் தொகுதிகளில் இவர் பாஜகவுக்கு மிக பெரிய இழப்பை ஏற்படுத்துவார் என அரசியல் வல்லுநர்கள் கூறியிருந்தனர். 


கடந்த 2019ஆம் ஆண்டு, காங்கிரஸிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த நிலையில், திப்ரா பழங்குடியின முற்போக்கு பிராந்தியக் கூட்டணி என்று அழைக்கப்படும் திப்ரா மோதா கட்சியை (டிஎம்பி) உருவாக்கினார். 


தாக்கத்தை ஏற்படுத்திய கிங் மேக்கர்:


2021 திரிபுரா பழங்குடி கவுன்சில் தேர்தலில் ஆளும் பாஜக-IPFT கூட்டணி, இடது முன்னணி மற்றும் காங்கிரஸை தோற்கடித்தார். இந்த தேர்தலில், மொத்தமுள்ள 60 இடங்களில் 42 இடங்களில் போட்டியிட்டுள்ளது அவரின் கட்சி. பழங்குடியினர் பகுதிகளில் வலுவான அரசியல் சக்தியாக திப்ரா மோதா கட்சி பார்க்கப்படுகிறது.


எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை என்றால் அதற்கு தேவ் வர்மா ஏற்படுத்திய தாக்கமே காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.