ஆயுஷ்மான் பாரத் திட்டம், கடந்த 2018ஆம் ஆண்டு, செப்டம்பர் 23ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை (UHC) அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் ஒரு மைல்கல்லாக உள்ளது.


தேசிய சுகாதாரக் கொள்கை 2017-ல் இருந்து உருவான ஆயுஷ்மான் பாரத் முன்முயற்சியின் முக்கிய அங்கமாக, இது சுகாதார சூழலை மாற்றியுள்ளது. 12 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் அல்லது கிட்டத்தட்ட 55 கோடி தனிநபர்களை உள்ளடக்கும் லட்சிய இலக்குடன், இத்திட்டம் உலகின் மிகப்பெரிய சுகாதார உத்தரவாதத் திட்டமாக மாறியுள்ளது, இது ஆண்டுதோறும் ஒரு குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் வரை நன்மைகளை வழங்குகிறது.


திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:


உலகின் மிகப்பெரிய சுகாதார உத்தரவாத திட்டம்: உலக அளவில் மிகப்பெரிய சுகாதார காப்பீடு / உத்தரவாத முயற்சியாக இது உள்ளது. இது மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படும் திட்டமாக உள்ளது.


ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீடு: இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்க ஒவ்வொரு தகுதியுள்ள குடும்பமும் ஆண்டுக்கு ரூ .5 லட்சம் மருத்துவ காப்பீட்டைப் பெறுகிறது.


12 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கான பாதுகாப்பு: 12 கோடி ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 55 கோடி பயனாளிகள் திட்டத்தின் பலன்களுக்கு தகுதியுடையவர்கள். இது மிகவும் பின்தங்கியவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்கிறது.


முதல் நாளிலிருந்து காப்பீடு: முன்பே இருக்கும் அனைத்து மருத்துவ நிலைமைகளும் பதிவு செய்த முதல் நாளிலிருந்தே காப்பீடு செய்யப்படுகின்றன. இது சரியான நேரத்தில் சிகிச்சையை உறுதி செய்கிறது. 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியோர்களுக்கும் இலவச மருத்துவக் காப்பீடு. 


ஒரு முக்கிய முடிவாக மத்திய அமைச்சரவை 2024 செப்டம்பர் 11 அன்று ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தை விரிவுபடுத்த ஒப்புதல் அளித்தது. இது 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு விரிவான சுகாதார காப்பீட்டை வழங்குகிறது.


இந்த நடவடிக்கை வருமானத்தைப் பொருட்படுத்தாமல், ஒரு குடும்பத்திற்கு ரூ .5 லட்சம் வரை இலவச சுகாதாரப் பாதுகாப்பை வழங்கும். இது 4.5 கோடி குடும்பங்களில் சுமார் 6 கோடி மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும். 


திட்டத்தின் சாதனைகள்: இந்தாண்டு, செப்டம்பர் 9 நிலவரப்படி, ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், இந்தியா முழுவதும் சுகாதார அணுகலை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. 35.4 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 7.79 கோடி மருத்துவமனை சேர்க்கைகளுக்கு அங்கீகாரம் அளித்தது. ரூ .1,07,125 கோடி நிதிக் காப்பீட்டை வழங்கியது ஒரு முக்கிய சாதனையாகும்.