Railway Luggage Charge: ரயில்களில் ஒவ்வொரு பயணியும் எவ்வளவு எடையிலான லக்கேஜ்களை இலவசமாக கொண்டு செல்லலாம் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ரயிலில் லக்கேஜ்களுக்கான கட்டணம்:
நாடாளுமன்ற உறுப்பினர் வேமிரெட்டி பிரபாகர் ரெட்டி, விமான நிலையங்களில் பின்பற்றப்படும் நடைமுறையைப் போலவே, ரயில் பயணிகளுக்கான உடைமைகள் விதிமுறைகளை ரயில்வே அமல்படுத்துமா? என்று எழுப்பிய கேள்வக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் ரயில் பயணிகள் கட்டணம் ஏதும் இன்றி குறிப்பிட்ட எடை வரையில் உடைமைகளை கொண்டு செல்ல அதிகபட்ச வரம்பு உள்ளது, அது பின்பற்றப்படுகிறது என்று தெளிவுபடுத்தினார்.
லக்கேஜ்களுக்கான வரம்பு என்ன?
மத்திய அமைச்சர் அளித்த பதிலில், “ரயில் பயணிகளுக்கான தற்போதைய லக்கேஜ் விதிகளின்படி, ஒவ்வொரு வகுப்பு ரயில் பயணிகளுக்கும் கட்டணமின்றி லக்கேஜ்களுக்கான கொண்டு செல்வதற்கு என தனித்தனி வகைப்பாடு உள்ளது. அதாவது,
- ஒரு பயணி ஏசி முதல் வகுப்பில் பயணம் செய்தால், அதிகபட்சமாக 150 கிலோ எடையுள்ள லக்கேஜை எடுத்துச் செல்லலாம். ஆனால், 70 கிலோவிற்கு அதிகமான லக்கேஜிற்கு தனியே கட்டணம் வசூலிக்கப்படும்.
- ஒரு பயணி முதல் வகுப்பு/ஏசி 2 அடுக்கில் பயணம் செய்தால், அதிகபட்சமாக 100 கிலோ எடையிலான லக்கேஜ்களை கொண்டு செல்லலாம். அதே நேரத்தில் 50 கிலோ எடையிலான லக்கேஜ்கள் மட்டுமே கட்டணமின்றி அனுமதிக்கப்படும்
- ஒரு பயணி ஏசி 3 டயர்/ஏசி சேர் காரில் பயணம் செய்தால், அதிகபட்சமாக 40 கிலோ எடையிலான லக்கேஜ்களை கொண்டு செல்லலாம். அதே நேரத்தில் இலவச அனுமதி 40 கிலோவாகும்.
- ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கு, அதிகபட்ச சாமான்கள் வரம்பு 80 கிலோவாகும், இலவச அனுமதி 40 கிலோவாகும்.
- இதேபோல், பயணிகள் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தால், அதிகபட்ச சாமான்கள் வரம்பு 70 கிலோவாகவும், இலவசமாக 35 கிலோ வரை அனுமதிக்கப்படும்.
கூடுதல் கட்டணம் எவ்வளவு?
ஒரு பயணி இலவசமாக அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான லக்கேஜை எடுத்துச் செல்ல விரும்பினால், பெட்டியில் அதிகபட்ச அளவு சாமான்களை எடுத்துச் செல்ல நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை (சாமான்கள் விகிதத்தை விட 1.5 மடங்கு) செலுத்தலாம். இது தவிர, பயணிகள் தங்கள் பெட்டிகளில் 100 செ.மீ × 60 செ.மீ × 25 செ.மீ (நீளம் × அகலம் × உயரம்) க்கு மிகாமல் இருக்கும் டிரங்குகள், சூட்கேஸ்கள் அல்லது பெட்டிகளை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என்ற விதிகளையும் ரயில்வே அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒரு பயணியின் சாமான்கள் இந்த அளவை விட அதிகமாக இருந்தால், அது பயணிகள் பெட்டியில் அனுமதிக்கப்படாது என்றும், பிரேக் வேன் (SLR) அல்லது பார்சல் வேனில் முன்பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், எந்தவொரு வணிகப் பொருட்களும் தனிப்பட்ட சாமான்களாக அனுமதிக்கப்படாது. இதன் பொருள், பயணிகளுக்கான அனுமதிக்கப்பட்ட சாமான்களின் எடையில் இந்த நேரத்தில் அதிகரிப்பு அல்லது குறைவு இல்லை. சாமான்கள் தொடர்பான தற்போதைய ரயில்வே விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.