இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மூன்றே நாட்களில் 71 பேர் உயிரிழந்துள்ளனர். 


கொட்டி தீர்க்கும் கனமழை:


தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே வடமாநிலங்களில் அதிதீவிர கனமழை தொடர்ந்து பதிவாகி வருகிறது. குறிப்பாக இமயமலை தொடரின் அருகே அமைந்துள்ள இமாசலபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்பட்டு வருகின்றன. இமாசலபிரதேசத்தில்  கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதோடு, அவ்வப்போது மேகவெடிப்பு ஏற்பட்டு அதிதீவிர கனமழையும் கொட்டுகிறது.


நிலச்சரிவும், உயிரிழப்பும்:


கடந்த திங்கட்கிழமை அன்று மாநில தலைநகர் சிம்லாவில் உள்ள சம்மர்ஹில் மற்றும் பாக்லி பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சம்மர்ஹில் பகுதியில் உள்ள ஒரு சிவன் கோவில் இடிந்து விழுந்தது. அதே போல் பாக்லி பகுதியில் பல வீடுகள் மண்ணோடு புதைந்தன. மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில்,  சம்மர்ஹில் பகுதியில் கோவில் இடிபாடுகளில் இருந்து இதுவரை 13 உடல்களும், பாக்லி பகுதியில் வீடுகளின் இடிபாடுகளில் இருந்து 7 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் வேளையில் அங்கு தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. அதுமட்டும் இன்றி தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.


வெள்ளப்பெருக்கு:


தொடர் கனமழையால் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மாநிலத்தில் இன்னும் சில தினங்களுக்கு மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுகு ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.


71 பேர் பலி:


ஆய்வுப் பணியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்தபோது "இமாசலபிரதேசத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 170 மேகவெடிப்பு சம்பவங்களால் கனமழை பதிவாகியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் இயல்பைவிட 157 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது. கனமழையால் 800-க்கும் அதிகமான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவுகளால் 9,600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மாநிலத்தில் கடந்த 3 நாட்களில் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. தலைநகர் சிம்லாவில் மீட்பு பணிகளுக்காக ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. கனமழையால் மாநிலத்துக்கு இதுவரை ரூ.10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் உள்கட்டமைப்பை மீண்டும் மேம்படுத்துவதற்கு ஓர் ஆண்டு ஆகும்" என சுக்வீந்தர் சிங் சுகு தெரிவித்தார்.