திருப்பதி கோவிலில் லட்டு விநியோகம் செய்யும் ஊழியர்கள் பணிக்கு வர மறுத்துவிட்டதால், லட்டு வாங்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 


நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைவான எடை கொண்ட ஸ்ரீவாரி லட்டு பிரசாதத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, திருப்பதி தேவஸ்தானத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது மட்டுமின்றி, பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.


அந்த வீடியோவில், ஒரு பக்தர் தான் வாங்கிய லட்டுவை எடை போடுமாறு லட்டு கவுண்டர் ஊழியர்களிடம் கோரிக்கை வைப்பது காணப்பட்டது. கவுன்டர் ஊழியர்கள், கவுன்டரில் உள்ள எடை இயந்திரத்தில் ஸ்ரீவாரி லட்டுவை எடைபோட்டபோது, ​​160 முதல் 180 கிராம் வரை நிர்ணயிக்கப்பட்ட எடைக்கு மாறாக, 90-100 கிராம் வரை மட்டுமே இருந்தது. பிரசாத விநியோகத்தில் அரசு மற்றும் திருப்பதி தேவஸ்தான வாரியம் வஞ்சகமாக இருப்பதாகக் குற்றம் சாட்டிய பக்தர், கவுண்டர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 


சமூக வலைத்தளங்களில் கண்டனம்: 


இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால், திருப்பதி தேவஸ்தானம் மற்றும் மாநில அரசுக்கு எதிராக பல தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. தெய்வத்திற்கு செய்யும் விஷயத்தில் ஊழலா என்று பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்க துவங்கினர். 10 முதல் 20 கிராம் குறைவதே தவறு, நிர்ணயிக்கப்பட்ட எடையை விட பாதியளவு குறைந்திருக்கிறது என்று பலர் கண்டனம் தெரிவித்தனர்.


திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஸ்ரீவாரி லட்டு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருப்பதாகக் கூறினர். லட்டு பிரசாதம் 160 கிராமுக்குக் குறையாது, ஆனால் அந்த லட்டு கவுண்டரில் உள்ள எடை இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீடியோவில் லட்டு எடை குறைவாகக் காட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


தேவஸ்தானம் விளக்கம்


“ஸ்ரீவாரி பொட்டில் (கோயில் சமையலறை) லட்டுகள் தயாரிக்கப்பட்ட பிறகு, பொட்டு தொழிலாளர்கள் அவற்றை ஒரு தட்டில் ஏற்றுகிறார்கள், இது விற்பனை கவுண்டர்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு ஒவ்வொரு நாளும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளால் எடை போடப்படுகிறது. 70 கிராம் வித்தியாசம் (வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி) லட்டு எடை இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அதைப் பற்றிய தெளிவு இல்லாததால் மட்டுமே ஏற்பட்ட பிரச்சனை, ”என்று TTD நிர்வாகம் ஒரு அறிக்கையில் கூறுகிறது. திருமலை லட்டு எடை 160 கிராமுக்கு குறையாது என்றும், கடந்த பல ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தானம் அதே அளவிலான பொருட்களை (லட்டு தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் அதன் விகிதாச்சாரங்கள்) பின்பற்றி வருவதாகவும், லட்டுகளை தயாரிக்கும் பொட்டு தொழிலாளர்கள் என்றும் தேவஸ்தான நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. தரம் அல்லது அளவு ஆகியவற்றில் ஒருபோதும் சமரசம் செய்யவில்லை என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. லட்டு கவுண்டர்களில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் உடனடியாக தீர்க்கப்படும் என்று அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களை வலியுறுத்தியது.


மேலும்  லட்டு கவுண்டரில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்த ஊழியர்களை தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் தீவிரமாக கண்காணிக்க துவங்கினர்.


இதனால் அதிருப்த்தி அடைந்த லட்டு கவுண்டர் ஊழியர்கள் வேலைக்கு வர மறுப்பு தெரிவித்தனர். இதனால் வேறு இடங்களில் இருந்து தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் தன்னார்வளர்களை வரவழைத்து லட்டு விநியோகம் செய்து வருகின்றனர்.


இதனால் லட்டு இருந்தும் விநியோகம் செய்ய ஆள் இல்லாததால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண தேவஸ்தானம் அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறது.