புதுதில்லியில் இன்று நடைபெற்ற 12-வது போக்குவரத்து உட்கட்டமைப்பு தொழில்நுட்ப கண்காட்சியில் உரையாற்றிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


அவர் பேசியதாவது “ நாட்டில் சாலை விபத்துக்களின் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டிய திரு கட்கரி, ஒவ்வொரு ஆண்டும்  நாட்டில்  சுமார் 5 லட்சம் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றும், இதன் விளைவாக ஏராளமான இறப்புகள் ஏற்படுகின்றன என்றும் குறிப்பிட்டார். இந்த உயிரிழப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 18-36 வயதுக்குட்பட்டவர்கள் என்று அவர் எடுத்துரைத்தார். சாலை விபத்துகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% என மதிப்பிடப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை மேம்படுத்துவது அரசின் முன்னுரிமை என்றும், இந்த பிரச்சினையை தீர்க்க ஏற்கனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.


தொழில்நுட்பம்:


சாலைப் பொறியியல் முறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், சமீபத்திய உலகளாவிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்தத் துறையில் புதுமைகளைப் புகுத்தி வரும் இந்திய புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் இளம் பொறியாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற ஆர்வத்தை அமைச்சர் வெளிப்படுத்தினார். மேம்பட்ட பொறியியல் தீர்வுகளை ஒருங்கிணைக்காமல், சட்டங்களை அமல்படுத்தாமல், செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளாமல் சாலை பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்று திரு கட்கரி குறிப்பிட்டார்.


தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சட்ட அமலாக்கத்தில் மேற்கொள்ளப்படும் புதிய அணுகுமுறைகள் குறித்தும் கட்கரி பேசினார். செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற புதுமையான முறைகள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை அடையாளம் காணும் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.  இது அபராதங்களைத் துல்லியமாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு வழி வகைகளை ஏற்படுத்தி தருகிறது என்றும் கூறினார்.






சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் அமைச்சகத்தின் அணுகுமுறையை எடுத்துரைத்த கட்கரி, தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்குவதற்கு  தனியார் துறையிலிருந்து நிபுணர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றார்.  பிரத்யேக நிபுணர் குழு ஒன்று தொடக்க புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களிடமிருந்து வரும் திட்டங்களை மதிப்பீடு செய்து, சிறந்த யோசனைகள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும். இத்துறையில் விரைவான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, மூன்று மாதங்களுக்குள் அதன் மதிப்பீடுகளை இறுதி செய்யுமாறு குழு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று நிதின்கட்கரி குறிப்பிட்டார்