தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிட அனுமதிக்காததன் மூலம் பயங்கரவாத நெட்வொர்க்கை மூடி மறைக்க உதவியதாக படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.


விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தென்னிந்தியாவில் இப்படத்திற்கு பெரிய அளவிளான வரவேற்பு இல்லாத நிலையில், இந்தி பேசும் மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.200 கோடியை கடந்து வசூலித்து வருகிறது.


இந்த நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழகம் மற்றும் மேற்கு வங்க அரசுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேட்டியில் அவர் பேசியதாவது: உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் முற்றிலுமாக நிராகரித்துள்ளன. ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிடக் கூடாது என திரையரங்க உரிமையாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். மீறி படத்தை வெளியிட்டால் திரையரங்க உரிமம் புதுப்பிக்கப்படாது என்றும் தாக்குதல் ஏதேனும் நடந்தால் பாதுகாப்பு கிடைக்காது என்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே யாரும் இப்படத்துக்காக தங்கள் உடைமைகளை ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.


தமிழகம் , மேற்கு வங்க அரசுகள் தான் ஜனநாயகம் நசுக்கப்படுவதாக எப்போதும் குற்றம்சாட்டி வந்துள்ளன. ஆனால் அவர்களே உச்சநீதிமன்ற உத்தரவை நிராகரித்து இப்படத்தை அனுமதிக்க மறுப்பது முரண். இந்த இரண்டு மாநில மக்களும், பாதிக்கப்பட்ட பெண்களுடன் நிற்கத் தயாராக இல்லாத அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும். உண்மையில் அவர்கள் இந்த பயங்கரவாத நெட்வொர்க்கை அம்பலப்படுத்துவதை மூடி மறைக்க உதவுகின்றனர்."  விபு ஷா இவ்வாறு தனது பேட்டியில் கூறியுள்ளார்.


மேலும் படிக்க 


CM Stalin Letter: சிங்கப்பூர் - மதுரை இடையே அதிக விமானங்கள் இயக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்..


Paddy: தருமபுரியில் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமா..?.. கேள்வி எழுப்பும் இபிஎஸ், அன்புமணி - ஆட்சியர் விளக்கம்