சூரியனை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ள, ஆதித்யா எல்1 நாளை காலை சரியாக 11.50 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.

Continues below advertisement

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. 40 நாட்கள் விண்வெளியில் பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் கால்தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமை இதன் மூலம் இஸ்ரோவிற்கு கிடைத்தது. நிலவை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அந்த திட்டம்தான் ஆதித்யா எல்1. இது  தொடர்பாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் தான் சூரியன். அதன்படி, சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம் என்பது 150 மில்லியன் கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த ஆதித்யா எல்1, சூரியனிலிருந்து ஒரு குறிப்பிட்ட  தூரத்தில் செயற்கைகோளை நிலைநிறுத்தி, அதன் மூலம் சூரியனின் செயல்பாடுகள் தொடர்பாக ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஆதித்யா எல்1 விண்கலம் பயணிக்க உள்ள மொத்த தூரம் 1.5 மில்லியன் கிலோ மீட்டர்.  இந்த இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி - சி57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான 24 மணி நேர கவுண்ட் - டவுன் இன்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது.

சூரியனை பற்றி ஆய்வு செய்ய விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer) உள்ளிட்ட முக்கிய கருவிகள் ஆதித்யா எல்1 –ல் உள்ளன.

2011 ஆம் ஆண்டில், ஆதித்யா-எல்1 மிஷனுக்காக சுமார் 380  கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால் இது தொடரபான அதிகாரப்பூர்வ தகவல் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே சூரியனை ஆராய பிரத்யேக செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளன. அதில், கடந்த 2017ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் பார்க்கர் சோலார் ப்ரோப் செயற்கைக்கோள் அதிகபட்சமாக, புவியிலிருந்து 8.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் சென்று சூரியனை ஆய்வு செய்து உள்ளது. இந்த வரிசையில் தற்போது இந்தியா இணைய உள்ளது. ஆனால், மற்ற நாடுகளை காட்டிலும் மிகக் குறைந்த செலவிலேயே ஆதித்யா எல்1 திட்டம் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.