மத்தியப் பிரதேசத்தில்  காங்கிரஸ் கட்சியின் "50% கமிஷன்" பிரச்சாரத்திற்காக பிரியங்கா காந்தி, கமல்நாத் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் மீது பாஜக தரப்பில் 41 புகார்களை பதிவு செய்யப்பட்டுள்ளது.


கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களை பிடித்து மாபெரும் வெற்றியடைந்தது. கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திய அதே யுக்தியை மத்திய பிரதேச தேர்தலிலும் பயன்படுத்தும் வகையில் காங்கிரஸ் முழு முதற்கட்டத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் பிரிவு, மத்திய பிரதேசத்தின் சிவராஜ் சிங் சவுகான் அரசுக்கு எதிராக "50% கமிஷன்" கமிஷணுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கியது. 






மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் எம்.பி.யுமான கமல்நாத் மற்றும் கட்சித் தொண்டர்கள், "கோட்டாலா ஹி கோட்டாலா; கோட்டாலா சேத், 50% கமிஷன் (கோட்டாலா என்றால் ஊழல் என்று அர்த்தம்)" என்று எழுதப்பட்ட போஸ்டர்களை வெளியிட்டனர்.






காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கமல் நாத் இது தொடர்பாக கூறுகையில், “மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாநிலத்தில் விவசாயிகள், இளைஞர்கள், தொழிலதிபர்கள் என அனைவரையும்  ஏமாற்றியுள்ளார். ஊழலுக்கு ஆளாகாத அல்லது ஊழலைப் பார்த்திருக்காத ஒருவர் கூட மாநிலத்தில் இருக்க முடியாது” என குறிப்பிட்டார். மேலும், “ அரசுப் பணிகளில் 50% கமிஷன் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டி மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, ஜபல்பூரில் உள்ள ரேவாவைச் சேர்ந்த கவுஷாலா பெட்டி ஒப்பந்ததாரர் சங்கம் தரப்பில் கடிதம் எழுதியுள்ளார். ஒப்பந்ததாரர்கள் இந்த அறிக்கையை பகிரங்கமாக வெளியிட்டனர். 50% கமிஷன் அரசால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்திய நீதித்துறை இதுபோன்ற தீவிரமான விஷயங்களில் தானாக முன்வந்து விசாரணை நடத்தும் கண்ணியமான வரலாற்றை கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தக்காரரின் கடிதத்தை கவனத்தில் கொண்டு, அவருக்கு பாதுகாப்பு அளித்து, மத்தியப்பிரதேசத்தை கரையான்களிடமிருந்து காப்பாற்றுமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.






மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாஜக அமைச்சர்கள் கட்டுமானம் மற்றும் இதர பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடம் 50% கமிஷன் கேட்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. செய்தித்தாளில் வெளியிடப்பட்ட செய்தியை பகிர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகஸ்ட் 11 அன்று டிவிட்டரில் பதிவிட்டார். அந்த பதிவில்,  "மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒப்பந்ததாரர்கள் சங்கம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது, அரசுப் பணிக்கான 50% கமிஷன் பணம் செலுத்திய பின்னரே பணிகளுக்கு வழங்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும், “கர்நாடகாவில் 40% கமிஷன் வசூலித்த ஊழல் பாஜக அரசு, மத்திய பிரதேசத்தில் தனது ஊழல் சாதனையை தானே முறியடித்து முன்னேறியுள்ளது. கர்நாடக மக்கள் 40% கமிஷன் அரசை தூக்கி எறிந்தனர், இப்போது மத்திய பிரதேச மக்கள் 50% கமிஷன் வாங்கும் பாஜக அரசை தூக்கி எறிவார்கள்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.






இந்த பதிவிற்கு பதிலளித்த பாஜக, பிரியங்கா காந்தி மீது, கட்சி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக அவர் மீது புகார் அளித்துள்ளது. பிரியங்கா மேற்கோள் காட்ட முயன்ற கடிதம் போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்து கருத்து தெரிவித்த கமல்நாத், மாநிலத்தில் நூற்றுக்கணக்கான ஊழல் வழக்குகள் இருப்பதாகவும், பிரச்சாரத்தைப் பயன்படுத்தி பாஜக தனது இமேஜைப் பாதுகாக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது வரை பிரியங்கா காந்தி, கமல் நாத் மற்றும் பிற தலைவர்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.  காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் அருண் யாதவ் கூறுகையில், "மத்திய பிரதேசத்தில் 50% கமிஷன் அரசு செயல்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன், நாங்கள் அதற்கு எதிராக குரல் எழுப்பினோம். ஊழல்வாதிகளுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை தொடருவோம்," என்று தெரிவித்துள்ளார்.