மண்வளம் காப்போம் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனம் தொடங்கியுள்ள நிலையில், அந்நிறுவனத்துடன் தெலங்கானா அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஈஷா நிறுவனத்தின் சமூக வளர்ச்சி துறையான ஈஷா அவட்ரீச்சுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.


மண் வளம் காப்போம் இயக்கத்தில் சேரும் ஆறாவது மாநிலம் தெலங்கானாவாகும். மண் வளம் காப்போம் இயக்கத்தின் சார்பாக ஹைதராபாத் ஜிஎம்சி பாலயோகி விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தெலங்கானா விவசாயத்துறை அமைச்சர் சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டி, ஜக்கி வாசுதேவ் ஆகியோல் கலந்து கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 


இயக்கத்திற்கு அரசின் சார்பாக முழு ஆதரவு அளிக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "மண் வளத்தை பொறுத்தவரை, உங்களுடன் முழுமையாக ஒப்பு கொள்கிறோம். உங்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, அதை அமல்படுத்துவோம்.






தனிமனிதனின் கடமை மற்றும் தார்மீகப் பொறுப்பின் மூலமும், கொள்கை வகுப்பாளர்களின் பொறுப்பின் மூலமும், அரசியல் பொறுப்பின் மூலமும் மட்டுமே மண்ணைக் காப்பாற்ற முடியும். இதை சாத்தியமாக்குவதில், உங்களைப் போன்றவர்கள் ஆற்றும் பங்கு மகத்தான மதிப்பு வாய்ந்தது. இது விலைமதிப்பற்றது, கம்பீரமானது மற்றும் பாராட்டுக்குரியது" என்றார்.


பின்னர், நடிகை சமந்தாவுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜக்கி, "நான் 30 வருடங்களாக இதைப் பற்றி மண்ணைக் காப்பாற்றுவது பற்றி பேசுகிறேன். நான் இதைப் பற்றி பேசும்போதெல்லாம், இது அருமை, இது அற்புதம் என்று மக்கள் சொல்வார்கள், பின்னர் அவர்கள் தூங்கிவிடுவார்கள். எனவே இப்போது, ​​அப்பிரச்னையை எழுப்ப விரும்புகிறேன். என்னையே சில ஆபத்தில் ஆழ்த்திக்கொண்டு அதைச் செய்வதற்கான எளிய வழி எனக்குத் தெரியும். 


அது வேலை செய்தது. ஏனென்றால் மூன்று நாட்களுக்கு முன்பு நமது சமூக ஊடக அளவீடுகள் மூலம் 2.8 பில்லியன் மக்கள் மண்ணைப் பற்றிப் பேசியுள்ளனது தெரியவந்துள்ளது" என்றார்.


டெல்லியில் நடைபெற்ற மண் வளம் காப்போம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, தனது ஆதரவை தெரிவித்தார். உலக நாடுகள் முழுவதும் மண வளம் காப்போம் குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ள ஜக்கி பயணம் மேற்கொண்டிருந்தார். அதை முடித்துவிட்ட அவர் இந்தியா திரும்பியதிலிருந்து, குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் அந்த இயக்கத்திற்கு ஆதரவை தெரிவித்துள்ளது.