குஜராத் மாநிலம் சூரத் நகரில் 8வது மாடியிலிருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. பதைபதைக்க வைக்கும் இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளது.மிஹிர் தேவ் என்ற 2 வயது குழந்தை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.


அந்தக் குழந்தையின் வீடு 8வது மாடியில் உள்ளது. கடந்த வியாழக்கிழமை மதியம் 2.15 மணியளவில், வீட்டில் அனைவரும் அவரவர் வேலையில் இருந்தனர். அப்போது அந்தக் குழந்தை பால்கனியில் இருந்த கம்பியில் ஏறியுள்ளது. கம்பி வழியாக கீழே குனிந்து பார்க்க முயன்றுள்ளது. அப்போது இரண்டு கிரில்களுக்கு இடையே அந்தக் குழந்தை தவறி விழுந்தது. 70 அடி உயரத்திலிருந்து குழந்தை தவறி விழந்தது. முதல் மாடியின் சீலிங்கில் குழந்தை விழுந்து மோதியது. இந்தக் காட்சிகள் அத்தனையுமே சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அக்கம்பக்கத்தினர் தான் இந்தச் சம்பவம் குறித்து மிஹிரின் குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். அதுவரை குழந்தையைப் பற்றி தெரியாமலேயே அவரவர் அவர்களின் வேலையில் இருந்துள்ளனர்.


குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல மருத்துவர்களோ குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் ஒரு பூஜை நடந்து கொண்டிருந்தது. அதனால் அனைவரும் அதில் கவனமாக இருந்தோம். குழந்தையும் வீட்டுக்குள் தான் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தது. ஆனால், எப்படி குழந்தை பால்கனிக்கு போனது என்பதை நாங்கள் கவனிக்கவில்லை என்று குடும்பத்தார் கூறியுள்ளனர்.


சென்னை சோகம் தீர்வதற்குள் சூரத் சம்பவம்:


அண்மையில் தான் இதுபோன்ற சம்பவம் சென்னையில் நடந்தது. சென்னை மண்ணடி, இப்ராகிம் சாஹிப் 2-வது தெருவைச் சேர்ந்த செல்வகனி - யாசின் தம்பதி.  அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது மூன்றாவது குழந்தையான ஆபியா  பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தார். தாய் யாசின் சமையல் வேலையை கவனிப்பதற்காக, மூத்த மகளிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு உள்ளே சென்றுள்ளார்.


ஆனால் சிறிது நேரத்தில் குழந்தையின் சகோதரியும் வீட்டிற்குள் சென்றுவிட்டாள். அந்த வேளையில், குழந்தை ஆபியா இரண்டடி உயரமுள்ள பால்கனி தடுப்பின் மீது மேலே ஏறியதாகவும், எதிர்பாராதவிதமாக கால் இடறி அங்கிருந்து கீழே விழுந்துள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தை 2 மணி நேரத்தில் இறந்தது.


குழந்தைகளை வளர்ப்பது என்பதும் ஒரு கலையே. நமக்கு சில நேரங்களில் சோர்வு கூட ஏற்படலாம் ஆனால், குழந்தைகள் மீது எப்போதும் ஒரு கண் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விபரீதங்கள் நிச்சயம் நடக்கும் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள் தான் உதாரணம். குறிப்பாக பால்கனிகளில் குழந்தைகளைத் தனியாக விடுவது எப்போதுமே ஆபத்தானது.