Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ‘மார்பகங்களைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமை அல்ல' என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ‘மார்பகங்களைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமை அல்ல' என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததுடன், இந்தத் தீர்ப்பு உணர்திறன் இல்லாததை காட்டுகிறது என்றும் கூறியது. ஒரு நீதிபதிக்கு எதிராக இப்படி சொல்லவே வேதனையாக இருக்கிறது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
11 வயது சிறுமியின் பைஜாமா கயிற்றை அவிழ்த்து கால்வாய்க்குள் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ய இரண்டு பேர் முயற்சி செய்துள்ளனர். அங்கு சிலர் வந்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதையடுத்து போலீசார் பவன், ஆகாஷ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை போக்சோவின் கீழ் கீழமை நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை முயற்சி என தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ஒரு பெண்ணின் மார்பகத்தைத் தொடுவது, பைஜாமா கயிற்றை அவிழ்ப்பது மற்றும் கால்வாயில் தள்ளிச் செல்ல முயற்சிப்பது ஆகிய செயல்கள் பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சி எனக் கருதப்படாது என அதிர்ச்சிக்குரிய தீர்ப்பை வழங்கியது.
தயாரிப்பு நிலையை தாண்டி செயல் நிலையை அடைந்திருக்க வேண்டும் எனவும் விளக்கம் அளித்திருந்தது. இது சர்ச்சையான நிலையில் தாமாக முன் வந்து உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு கடும் கண்டனத்தை உச்சநீதிமன்றம் பதிவு செய்தது.
மேலும், “இந்த தீர்ப்பு குறித்து மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் பதில் அளிக்க வேண்டும். தீர்ப்பு சட்ட கோட்பாடுகளுக்கு எதிராகவும், மனிதாபமற்ற அணுகுமுறையை சித்தரிக்கிறது.
சிறுமிக்கு நிகழும் வன்கொடுமையை தடுப்பதுதான் சட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர அதனை விட கூடுதல் வேதனையை ஏற்படுத்த கூடாது” எனத் தெரிவித்துள்ளது.