பிரதமர் மோடியின் கல்வி தகுதி தொடர்பாக தொடர் சர்ச்சை நீடித்து வருகிறது. கடந்த 1978ஆம் ஆண்டு, பிரதமர் மோடி இளங்கலையில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுதிறது. ஆனால், அவர் பட்டம் பெறவே இல்லை என சர்ச்சை எழுந்தது. இதை தொடர்ந்து, 1978ஆம் ஆண்டு பி.ஏ. படித்த அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளையும் அவர்களின் பெயர், எண் ஆகியவற்றையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  கோரி இருந்தார்.


பிரதமர் மோடியின் கல்வி தொடர்பாக நீடிக்கும் சர்ச்சை:


ஆனால், கேட்கப்பட்ட தகவல் மூன்றாம் தரப்பினருடையது எனக் கூறி அதை அளிக்க டெல்லி பல்கலைக்கழகத்தின் மத்திய பொது தகவல் அதிகாரி மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.


இதுகுறித்து மத்திய தகவல் ஆணையம், கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், "வழக்கை விசாரித்ததை தொடர்ந்து முன்னதாக வழங்கப்பட்ட தீர்ப்புகளை பரிசீலனை செய்யப்பட்டதில், முன்னாள் அல்லது இந்நாள் மாணவரின் கல்வி தொடர்பான விவரங்கள் அனைத்தும் பொதுவெளியின் கீழ் வருகிறது. எனவே, கேட்கப்பட்ட தகவல்களை வழங்கமாறு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு உத்தரவிடப்படுகிறது" என தெரிவித்தது.


மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக டெல்லி பல்கலைக்கழகம் 2017ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. முதல் விசாரணையிலேயே, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.


அதன்பிறகு வெவ்வேறு காரணங்களுக்காக வழக்கு மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கின் தீர்ப்பில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று கொரோனா பெருந்தொற்று.


அவதூறு பரப்பினாரா கெஜ்ரிவால்?


இதற்கிடையே, பிரதமர் மோடியின் பட்டம் தொடர்பான விவரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு பிறப்பித்த உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், விவரங்களை கேட்டு வழக்கு தொடர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


இதை தொடர்ந்து, கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் மீது குஜராத் பல்கலைக்கழக பதிவாளர் பியூஷ் படேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கில் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.


அவரின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்த நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடினார் கெஜ்ரிவால். இந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் கொண்ட அமர்வு, இன்று விசாரணைக்கு எடுத்து கொண்டது.


இந்த வழக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறி, உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை தொடர்ந்து, வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.