பாதுகாப்பு இடங்களுக்கு உள்ளேயே இருங்கள்; இந்தியா உங்களை மீட்கும் என்று உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களிடம் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.


உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடுப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளிய ரஷ்யா, கடந்த 10 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தது. உக்ரைன் நாட்டின் விமானத்தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்தது. பல்கலைக்கழகத்தின்மீது குண்டு வீசிய காட்சிகளும் வைரலாகின. 


உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ஆபரேஷன் கங்கா என்ற பெயரின் கீழ் மத்திய அரசு மீட்டு வருகிறது. அங்கு சென்றிருந்த மாணவர்களில் 90% பேர் மருத்துவம் பயிலவே சென்றிருந்தனர். மத்திய அரசு வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தில் உக்ரைனில் உள்ள 18,095 இந்தியர்களில் 90% மாணவர்கள் மருத்துவம் பயிலச் சென்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 


இதற்கிடையே போரை மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரஷ்யா இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு இடங்களுக்கு உள்ளேயே இருங்கள்; இந்தியா உங்களை மீட்கும் என்று உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களிடம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.


இதுகுறித்து அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்‌ஷி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ''நம்முடைய மாணவர்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு இடத்தில் தங்கியிருங்கள். தேவையில்லாத அபாயங்களைத் தவிருங்கள். அமைச்சகமும் தூதரகமும் மாணவர்களிடம் தொடர்ச்சியாகப் பேசி வருகிறோம்.




உக்ரைன் நாட்டில் உள்ள சுமி நகரத்தில் வாழும் இந்திய மாணவர்கள் குறித்து கவலை கொண்டுள்ளோம். ரஷ்ய மற்றும் உக்ரைன் அரசுகளிடம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பல்வேறு ஊடகங்கள் மூலம் வலியுறுத்தி உள்ளோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்திய அரசுக்கான உக்ரைன் தூதர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''பாதுகாப்பு இடங்களுக்கு உள்ளேயே இருங்கள்; இந்தியா உங்களை விரைவில் தாய் நாட்டுக்கு மீட்டுச் செல்லும். ஏற்கெனவே உக்ரைனில் இருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களை மீட்டுள்ளோம்''  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண