திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என்று தனது திருப்திக்காக ஸ்டாலின் சொல்லி வருகின்றார் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார்.


மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி சென்றார். அவர் இன்று ராஜ்பவன் தொகுதி வைத்திகுப்பம் பகுதியில் நடந்த மீனவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மீனவர்களுக்காக மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துக் கூறிய எல்.முருகன் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது, ''தமிழ் மண்ணான புதுச்சேரியில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி உள்ளது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது. தமிழகத்தில் திமுக பலமுறை தூக்கி எறியப்பட்டது. எம்.ஜி.ஆர் இருந்தபோது திமுக வெற்றி பெறுவதே கடினமாக இருந்தது. கருணாநிதி ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார். ஆகவே ஒரு தேர்தலை வைத்து மட்டுமே மற்ற விஷயங்களை சொல்லி விட முடியாது.


பா.ஜ.க. வளர்ச்சி:


பாஜக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். புதுச்சேரியில் பாஜகவின் தேசிய ஜனநாயக ஆட்சி நடக்கிறது. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளோம். எனவே, திராவிட மண்ணில் பாஜக வரமுடியாது; பாஜக துடைத்தெறியப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறுவது அவருடைய கற்பனை. அவர் தனது திருப்திக்காக இதுபோன்று கூறி வருகின்றார். உண்மையில் இன்று பாஜகவுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் 2018-ல் பாஜகவின் வாக்கு சதவீதம் எப்படி இருந்தததோ, அதே போன்ற வாக்கு சதவீதம் இப்போதும் உள்ளது என்று அவர் தெரிவித்தார். 


திராவிட மண்ணில் அகற்றம்:


முன்னதாக,  முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தல் பதிவிட்டதாவது: கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு,  ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்துள்ளது.


பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமையை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்றும் இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம் என்றும் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க 


Mother's day special: ஹீரோயின் டூ அம்மா...! தமிழ் சினிமா கண்ட பல வகையான அம்மாக்கள்...