பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் அவர்கள் முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளனர்.


இலங்கை அதிபரின் இந்திய பயணம்:


இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட உயர்மட்ட பிரமுகர்களுடன் அதிபர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பேச்சுகளில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினரும் பங்கேற்கவுள்ளனர்.


இலங்கை தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், இந்திய வம்சாவளி மக்களான மலையக மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் சம்பந்தமாக இந்திய தரப்புக்கு எடுத்துரைக்கவுள்ளார்.


இலங்கை - இந்திய மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா?


மலையக தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அரச அங்கீகாரத்துடன் தேசிய மட்ட நிகழ்வு எதிர்வரும் நவம்பரில் நடத்தப்படவுள்ளது. இது சம்பந்தமாகவும், இந்நிகழ்வில் இந்திய பிரதிநிதி பங்கேற்பதற்கான அழைப்பும் ஜீவன் தொண்டமானால் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.


அத்துடன், இந்தியாவின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டம், மலையக பல்கலைக்கழக விவகாரம், மலையக மாணவர்களுக்கான நிதியுதவி அதிகரித்துக்கொள்ளல் உள்ளிட்ட விவகாரங்கள் சம்பந்தமாகவும் இந்திய தரப்புடன் கலந்துரையாடுவதற்கு ஜீவன் தொண்டமான் ஈடுபட்டுள்ளார். அவர் பிரத்தியேக சந்திப்புகளிலும் ஈடுபடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


அதேவேளை, பெரும் பிரச்னையாக உள்ள இலங்கை - இந்திய மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பது சம்பந்தமாகவும் இலங்கை, இந்திய தரப்புகள் பேச்சு நடத்தவுள்ளன. மீனவர் பிரச்னை சம்பந்தமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கை கவனத்தில் எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.