உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போதே அங்கு வேலைகளை முடுக்கிவிட்டு இருக்கிறது, பா.ஜ.க. தலைமை. மோடிக்கு அடுத்து பிரதமராகக் கொண்டுவரப்படுவார் எனப் பேசப்பட்ட உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் இல்லாமல், அவரின் அமைச்சரவை சகாக்களுடன் தனித்தனி உரையாடலை பாஜக தேசிய நிர்வாகி நடத்திவருவது அங்கு பரபரப்பை உண்டாக்கியுள்ளது.



பா.ஜ.க.வின் அகில இந்திய துணைத் தலைவரும் உ.பி. பொறுப்பாளருமான இராதா மோகன் சிங், சில நாள்களாக லக்னோவில் தங்கி பல சந்திப்புகளை நடத்திவருகிறார். முன்னதாக, அக்கட்சியின் அமைப்புப் பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் சிங் மூன்று நாள்கள், எல்லா அமைச்சர்களிடமும் தனித்தனியாக நேரம் ஒதுக்கி பேசினார். அதைத் தொடர்ந்து ராதா மோகன் சிங்கும் சந்திப்புகளை நடத்தியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.


உ.பி. மாநில ஆளுநர் ஆனந்த் பென் பாட்டீல், சட்டப் பேரவைத் தலைவர் இருதய் நாராயண் தீட்சித் மற்றும் பல அமைச்சர்களையும் இராதா மோகன் சிங் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து சந்தித்துப் பேசினார். இது பற்றிக் கேட்டதற்கு, இவை முழுவதும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார் அவர். ஆனால், உத்தரப்பிரதேச பாஜக நிர்வாகிகளோ, உள்குத்துகள் உச்சத்துக்குப் போய்க்கொண்டு இருக்கின்றன என்பதைக் காட்டுவதாகக் கூறுகின்றனர். குறைந்தபட்சம் உ.பி. அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என அடித்துக் கூறுகின்றனர். ஆனால், இதையும் மறுத்துள்ள இராதா மோகன் சிங், “அமைச்சர்களை மாற்றுவது முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்புரிமை.” என்று கூறியுள்ளார்.


கடந்த ஏப்ரலில் உ.பி.யில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதற்குக் காரணம் கொரோனா பாதிப்பில் மாநில அரசு சரியாகச் செயல்படவில்லை என்றும் கூறப்பட்டது. அதையும் பூடகமாகக் குறிப்பிட்ட இராதா மோகன், 2015 பஞ்சாயத்துத் தேர்தலைவிட இந்த முறை பா.ஜ.க. சாதகமான முடிவையே பெற்றிருக்கிறது என்றும் சுய பாராட்டு கொடுத்துக்கொண்டார்.
 அடுத்து அவர் சொன்னதுதான், முக்கியம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இதைவிட சிறப்பான இடத்தைப் பிடிப்போம் என்ற அவரின் வாசகம்தான், இப்போதைய உ.பி. பாஜகவின் பரபரப்புக்கு அடிநாதம் என்கிறார்கள்.


ஆதித்யநாத்துக்கு எதிரான குரலை அமுக்குவதில் சந்தோஷும் இராமோசிங்கும் தீவிரமாக வேலை செய்துபார்க்கின்றனர். கொரோனா பாதிப்பில் ஆதித்ய நாத்தின் செயல்பாட்டைப் பாராட்டி அவரின் பக்கம் நிற்பதாகவும் காட்டுகின்றனர். அமைச்சரவையில் மாற்றம் செய்யும்போது அவரே முடிவெடுத்துக்கொள்ளட்டும் என்று இராதா மோகன் சிங் வெளிப்படையாகவும் கூறியுள்ளார்.


ஆளுநருடனான சந்திப்பு பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த இராதா மோகன் சிங், “ அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோதே நன்றாகத் தெரியும். அப்போது நான் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தேன். சட்டப்பேரவைத் தலைவரையும் நீண்ட காலமாகவே நன்கு அறிவேன்.” என்று விளக்கம் அளித்தார். கூடவேம் சட்டப்பேரவைத் தலைவர் தீட்சித்தும், இராதா மோகன் சிங்கும் நானும் நெடுங்காலமாக பரஸ்பரம் பழக்கமானவர்கள்; நாட்டின் தொன்மையான கலாச்சாரம் பற்றியும் வரலாற்றைப் பற்றியும் விவாதித்தோம்.” என்று ஒரே போடாகப் போட்டார்.


லக்னோவில் இப்படி ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க, டெல்லியிலோ பிரதமர் மோடியுடன் பாஜகவின் பொதுச்செயலாளர்கள் பிரதமர் மோடியுடன் உ.பி. விவகாரம் பற்றிப் பேசுவதற்காகக் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.


மாநிலத்தில் கடந்த 15 நாள்களாக பாஜகவுக்குள் சந்திப்புகளும் கமுக்கக் கூட்டங்களும் விவாதங்களும் என அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டப் பரபரப்பு தொடர்ந்து நீடிக்கிறது. சில அமைச்சர்களை மட்டும் மாற்றுகிறார்களா முதலமைச்சரையே மாற்றப் போகிறார்களா என்பதுதான் அங்கு இப்போது எழுந்துள்ள கேள்வி!