சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஹைதராபாத்தில் இருந்து தமிழ்நாடு வழியாக கொல்லத்திற்கு டிசம்பர் 5 முதல் 2023 ஜனவரி 9 வரை வாராந்திர சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பிறகு மண்டல பூஜை இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டதால் பக்தர்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. நாளுக்கு நாள் சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  


சபரிமலை ஐயப்பன்கோவிலில் நடப்பாண்டிற்கான மண்டல பூஜைக்கான நடை நவம்பர் 16ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது.  சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16ஆம் தேதி முதல் தொடர்ந்து 41 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் மாதம் 27-ந் தேதி மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது. இதன் பிறகு நடை மூடப்படும்.


கேரள மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வருவது வழக்கம். சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும், கொரோனா பரவல் மற்றும கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் நடை திறந்த நாள் முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வந்த வண்ணம் உள்ளனர். கடந்த 2 நாட்களில் 1,75,000 பேர் தரிசனம் செய்துள்ளனர் என கூறப்படுகிறது.   


பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுவதும் வழக்கம். 


பேருந்துகள் இயக்கப்படுவது போலவே சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. சென்னை மாநகர் மற்றும் தமிழக டெல்டா மாவட்ட ஐயப்ப சுவாமிகளுக்கு வசதியாக ஐயப்பன் கோவிலின் மிக அருகாமையில் உள்ள சபரிமலை நுழைவாயிலான "புனலூர் வழியாக" அகல இரயில் பாதை மாற்றத்திற்குப் பிறகு முதன்முறையாக இயக்கப்படுகிறது. இந்த இரயில் தாம்பரத்திலிருந்து விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர் மாநகர்), சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சிவகாசி, இராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை , "புனலூர் (சபரிமலை)", கொல்லம், கோட்டயம் வழியாக எர்ணாகுளம் (கொச்சி) வரை இயக்கப்படுகிறது.


இந்தச் சிறப்பு ரயிலுக்கு புனலூர் ரயில் நிலையத்திலிருந்து நேரடியாக கேரள அரசின் சிறப்புப்பேருந்துகள் இயக்கத் திட்டமிட்டு உள்ளனர். 28-நவம்பர்-2022 முதல் 03-நவம்பர்-2023 வரை திங்கள்தோறும் எர்ணாகுளத்திலிருந்தும், செவ்வாய்தோறும் தாம்பரத்திலிருந்தும் ஆறு சேவைகள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.   


தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக, ஹைதராபாத்தில் இருந்து தமிழ்நாடு வழியாக கொல்லத்திற்கு டிசம்பர் 5 முதல் 2023 ஜனவரி 9 வரை வாராந்திர சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: 


"ஹைதராபாத்தில் இருந்து கொல்லத்திற்கு (07053) வாராந்திர சிறப்பு ரயில் டிசம்பர் 5 முதல் 2023 ஜனவரி 9 வரை அனைத்து திங்கட்கிழமைகளிலும் இயக்கப்படும்! இந்த ரயில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஹைதராபாத்தில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (செவ்வாய்கிழமை) இரவு 11.50 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். திரும்பும் போது, ​​வாராந்திர சிறப்பு ரயில் (07054) ஒவ்வொரு புதன்கிழமையும் டிசம்பர் 7 முதல் 2023 ஜனவரி 11 வரை அதிகாலை 2.30 மணிக்குத் தொடங்கும். இந்த ரயில் மறுநாள் (வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். இந்த ரயில்கள் தமிழ்நாடு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.”