Rajini Akhilesh Yadav: கல்லூரியில் படிக்கும்போது ரஜினியை திரையில் பார்த்த மகிழ்ச்சி இன்னும் அப்படியே இருக்கு ..அகிலேஷ் யாதவ் நெகிழ்ச்சி

Akhilesh Rajini: உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவை ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசினார். 

Continues below advertisement

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி  வெளியாகி தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. 
படம் ரிலீசாவதற்கு முன்பே இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் கிளம்பிய  நடிகர் ரஜினிகாந்த், ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று தற்போது உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் எனப் பயணித்து வருகிறார்.

Continues below advertisement

ஜெயிலர் ரிலீஸை தொடர்ந்து வட மாநிலங்களை ரவுண்ட் அடிக்கும் ரஜினி:

உத்தரகாண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் என வரிசையாக பாஜக பிரமுகர்களை சந்தித்து வரும் ரஜினிகாந்த், நேற்று காலை உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மௌரியாவுடன் தனது ஜெயிலர் படத்தைப் பார்த்து ரசித்தார். தொடர்ந்து, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். 

அப்போது, ரஜினிகாந்த், அவரது காலில் விழுந்து தொட்டுக் கும்பிட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதற்கிடையே, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவை ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசினார். 

"இதயங்கள் சந்தித்த பொழுது தழுவிக் கொண்டன"

ரஜினிகாந்துடனான சந்திப்பு குறித்து நெகிழ்ச்சிப்பட குறிப்பிட்ட அகிலேஷ் யாதவ், "இதயங்கள் சந்தித்த பொழுது தழுவிக் கொண்டன. மைசூரில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது ரஜினிகாந்தை திரையில் பார்த்த மகிழ்ச்சி இன்னும் அப்படியே இருக்கிறது. நாங்கள் 9 ஆண்டுகளுக்கு முன்பு நேரில் சந்தித்தோம், அன்றிலிருந்து நண்பர்களாக இருக்கிறோம்" என எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, அகிலேஷ் உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, "நான் அகிலேஷ் யாதவை 9 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் ஒரு விழாவில் சந்தித்தேன்.

அன்றிலிருந்து நாங்கள் நண்பர்கள். நாங்கள் தொலைபேசியில் பேசி இருக்கிறோம். 5 வருடங்களுக்கு முன்பு இங்கு படப்பிடிப்பிற்காக வந்தபோது அவரை சந்திக்க முடியவில்லை. இப்போது, அவர் இங்கே இருக்கிறார் அதனால் அவரை சந்தித்தேன்" என்றார். இதை தொடர்ந்து, அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.

கடந்த வாரம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்று துறவிகளை சந்தித்து அவர்களிடம் உரையாடிய ரஜினிகாந்த், பின்னர் உத்தரகாண்டில் இருக்கும் வியாசர் குகைக்கு சென்று வழிபட்டார்.

தொடர்ந்து துவாரஹட்டில் உள்ள பாபாஜி குகைக்கு சென்று தியானத்தில் ஈடுபட்ட ரஜினிகாந்த், கையில் குச்சியை ஊன்றியபடி கரடுமுரடான பாதையில், நண்பர்களுடன் பயணம் மேற்கொண்ட வீடியோவும் இணையத்தில் வைரலானது. ரஜினி நடிப்பில் அடுத்ததாக லால் சலாம் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Continues below advertisement