Sikkim Flood: சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உட்பட 56 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சிக்கிமில் கனமழை:


சிக்கிம் மாநிலத்தில் திடீர் மேகவெடிப்பு காரணமாக தொடர்ந்து நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து, லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


இதையடுத்து அந்த பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்த ராணுவ வாகனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேற்றில் மூழ்கியுள்ளது. மேலும், மரங்கள், 1,200க்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதோடு, 14 பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. சிக்கிமின் சுங்தாங் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.


மற்ற பகுதிகளைக் காட்டிலும் 80 சதவீதம் சுங்தாங் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டீஸ்டா நதி பாயும் வடக்கு வங்கத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தால் மங்கன், கேங்டாக், பாக்யோங் மற்றும் நாம்ச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அக்டோபர் 8ஆம் தேதி மூடப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.


56 பேர் உயிரிழப்பு:


சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 40 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, இன்று 56ஆக உயர்ந்துள்ளது.  இதில் 7 ராணுவ வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.  சிக்கிமில் இருந்து இதுவரை 26 உடல்களும், மேற்கு வங்கத்தில் உள்ள டீஸ்டா நதிப் படுகையில் 30 உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கடும் வெள்ளப்பெருக்கால் 25 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், 142 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது.


அவர்களில், பாக்யோங்கில் 59 பேரும், காங்டாக்கில் 22 பேரும், மங்கனில் 17 பேரும், நாம்ச்சியில் 5 பேரும் காணாமல் போயுள்ளனர். சிக்கிமில் இருந்த நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டார் காணாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது.  லாச்சென், லாச்சுங் மற்றும் சுங்தாங் பகுதிகளில் இதுவரை 1,471 சுற்றுலா பயணிகளை மீட்டுள்ளனர். மேலும், 22,034 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை வெள்ளத்தில் சிக்கி 2,413 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.


நிவாரணம் அறிவிப்பு:


வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளில் 30 பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது.  பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை  6,875 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நான்கு மாவட்டங்களில் சுமார் 26 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகிறது. 


இதற்கிடையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் பிரேம்சிங் ஆறுதல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.  முகாம்களில் தஞ்சம் அடைந்த அனைவருக்கும் தலா 2,000 ரூபாய் உடனடி நிவாரணமாக அறிவித்தார்.