நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. மகாராஷ்ட்ரா, டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் தொற்றின் தாக்கம் தீவிரமாகி வருகிறது. மகாராஷ்ட்ராவில் தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. டெல்லி, ஹரியானா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ரெம்டெசிவிர் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டெல்லி மருத்துவமனைகளில் குறைந்த அளவிலான ஐ.சி.யூ. படுக்கைகளே உள்ளன. மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களும், ஐ.சி.யூ. படுக்கைகளும் மிக வேகமாகவே குறைந்து வருகிறது.




இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் 6 ஆயிரம் படுக்கைகளை அதிகரிக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. நவம்பர் மாதம் மத்திய அரசு 4 ஆயிரம் படுக்கைகளை வழங்குவதாக கூறியது. ஆனால், இதுவரை 1,800 படுக்கைகள் மட்டுமே வழங்கியுள்ளனர். கொரோனா பரிசோதனை முடிவுகளை வழங்குவதில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தாமதம் ஆவதாக குற்றச்சாட்டு வருகிறது. 24 மணிநேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வழங்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”


இவ்வாறு அவர் கூறினார். பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசி மற்றும் படுக்கைகள் தட்டுப்பாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.