பஞ்சாப் அடுத்த அமிர்தசரஸ் அருகே உள்ள முச்சல் கிராமத்தில் 16 வயது மகளை அவரது தந்தையே ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமிர்தசரஸ் அருகே உள்ள முச்சல் கிராமத்தில் 16 வயது சிறுமி ஒருவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து, இந்த சிறுமியின் பெற்றோர்கள் அனைத்து இடங்களிலும் இவரை தேடி அலைந்ததாக கூறப்படுகிறது.  சிறுமி காணாமல் போனதாகவும், அவளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.


இந்தசூழலில், இரண்டு நாட்களாக சிறுமி காணாமல் போயிருந்த நிலையில் திடீரென வீடு திரும்பியுள்ளார். தந்தையின் கோபம் அதிகமாகி, தலைமுடியை பிடித்து இழுத்து வந்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அதிர்ச்சியளிக்கும் விதமாக, கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை தனது மோட்டார் சைக்கிளில் கட்டி, அனைவரும் பார்க்கும்படி சாலையில் தர தரவென இழுந்து சென்றுள்ளார். தொடர்ந்து, அப்பகுதி அருகே உள்ள ரயில் பாதை ஒன்றில் சிறுமியின் உடலையும் வீசிவிட்டு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. 






இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும், தந்தை தனது மோட்டார் சைக்கிளில் மகளின் உடலை கட்டி இழுத்து சென்ற காட்சிகளும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 


இதையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையின் மூத்த கண்காணிப்பாளர் சதித்னர் சிங், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதனை தொடர்ந்து, கொலை செய்த சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளார். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் யாரும் இதுகுறித்து புகார் கொடுக்க கூட தயாராக இல்லை என்று அதிகாரி தெரிவித்துள்ளார். 


இருப்பினும், சிறுமி எதனால் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கி, கொலை செய்த தந்தையை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது பேசிய அவர், “ எனது மகள் வேறொருவரின் வீட்டில் தனியாக இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். எனக்கு மானம்தான் முக்கியம். நான் கண்ணியமானவன். அதனால், அவளை கொன்றேன்” என தெரிவித்துள்ளார். 


இதைகேட்டு அதிர்ச்சியடைந்த நீதிமன்றம், அவரை ஒருநாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டநிலையில், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.