டைம் பத்திரிக்கையின் , "2021ம்  ஆண்டிற்கான மிகவும் செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலில்" சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா இடம்பெற்றுள்ளார். 


உலகின் பிரபல ஆங்கில நாளிதழான டைம் பத்திரிக்கை, ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பட்டியல் நேற்று வெளியானது. 


இதில், உலகின் முக்கிய அரசியல் தலைவர்கள், இசைக் கலைஞர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர்  இடம் பெற்றுள்ளனர். நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 


அதார் பூனாவாலா: 


மூத்த பத்திரிக்கையாளர் ABHISHYANT KIDANGOOR எழுதிய விமர்சனத்தில், "அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம்  ‘கோவிஷீல்டு’  தடுப்பூசியை இந்திய சீரம் மையம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா ஆவார்.  2021 ஆண்டின் இறுதிக்குள், கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வளர்ந்து வரும் நாடுகளுக்கு 1.1 பில்லியன் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த உத்தரவாதம் தான்,  உலகளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசிகளின் சமமான மற்றும் நியாயமான விநியோகத்தை உறுதி செய்வதற்கான 'கோவாக்ஸ்  முன்முயற்சிகள்' அடித்தளமாக அமைந்தது. 



     


இதற்கிடையே, சீரம் உறபத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, தடுப்பூசி ஏற்றுமதிக்குத் தடை, இவரின் முயற்சிகளுக்குத் தடைபோட்டன. கொரோனா பெருந்தொற்று பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அனைத்து நாடுகளும் தடுப்பூசிகளை சமமாக பெற்றுக் கொள்வதை உறுதி செய்வதன் மூலம், புதிய உருமாறிய கொரோனா பாதிப்பு பரவலைத் தவிர்க்க முடியும்.  எனவே, அதார் பூனாவாலா வரும் நாட்களில் மக்களுக்கு உதவ முடியும் என்று தெரிவித்தார்.   


மம்தா பேனர்ஜி: 


மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு என்ற அரசியல் கட்சியின் நிறுவனரும் முதன்மை நிர்வாகியுமான மம்தா பானர்ஜி இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.




நடந்து முடிந்த,  2021 சட்டமன்றத் தேர்தலில், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரசு 213 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி 77 இடங்களையும் கைப்பற்றியது.  மத்தியில் ஆளும் பாஜகவிடம்  ஆள்பலம், அரசுபலம், அதிகாரப்பலம், பணபலம் அனைத்தும் இருந்தும் மம்தா பானர்ஜியை அதனால் தோற்கடிக்க முடியவில்லை. 


நரேந்திர மோடி: நரேந்திர மோடி இந்தாண்டும் எதிர்மறையான காரணங்களுக்கு இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 




நரேந்திர மோடி குறித்து மூத்த பத்திரிக்கையாளர் FAREED ZAKARIA எழுதிய விமர்சனத்தில், " ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி போன்ற பாரதப் பிரதமர்களுக்குப் பிறகு நாட்டின் மூன்றாவது மிக முக்கியத் தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கொரோனா இரண்டாவது அலையை  சரியான முறையில் கையாளப்படாத காரணத்தினால், இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம், அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட அளவைவிட கூடுதலானது. இருந்தாலும், அரசியல் ரீதியாக மோடியின் செல்வாக்கு குறையவில்லை. இந்தியாவில் மோடியின் ஒப்புதல் விகிதம் 71% ஆக இருந்தது. 


சமூகவுடைமை பொருளாதார சிந்தனையில் இருந்து, முதலாளித்துவ பாதையில் இந்தியா வழிநடத்த மோடி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். ஆனால், நாட்டின்  மதச்சார்பற்ற மரபை அகற்றி 'இந்து தேசியவாத' அடையாளத்தை நிறுவுவதில் பல உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இஸ்லாமிய சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதுடன், அதன் துஷ்பிரயோகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் பத்திரிகையாளர்கள் சிறை வைக்கப்படுகின்றனர். 2020ல், உலகின் 70% இணைய துண்டிப்பு  மோடி ஆட்சியின் கீழ் நடைபெற்றுள்ளது" என்று தெரிவித்தார்.