மும்பையில் நவம்பர் 1-ம் தேதி முதல் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சக பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என மும்பை போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.


மாநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு, ஒரு அறிக்கையில், அனைத்து வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதிக்கு முன் நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் வசதியை பொருத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.


நவம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு, மும்பை சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைத்து மோட்டார் வாகன ஓட்டுநர்களும், பயணிகளும் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மீறுபவர்கள் மீது மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 194 (பி) (1)ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


சட்டத்தின் விதியின்படி, பாதுகாப்பு பெல்ட் அணியாமல் மோட்டார் வாகனத்தை ஓட்டுபவர்கள் அல்லது சீட் பெல்ட் அணியாமல் பயணிகளை ஏற்றிச் செல்வோர் தண்டிக்கப்படுவார்கள்.


டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த மாதம், பால்கர் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார், விபத்து குறித்து விசாரணை நடத்தியதில், மெர்சிடிஸ் காரின் பின் இருக்கையில் இருந்த அவர் பாதுகாப்புக்கான சீட் பெல்ட் அணியவில்லை எனத் தெரியவந்தது.


கார் வேகமாகச் சென்றதில் சைரஸ் மிஸ்திரியின் வாகனம் அண்டை மாவட்டத்தில் உள்ள சூர்யா நதியில் உள்ள பாலத்தின் டிவைடரில் மோதியது. விபத்து ஏற்படுத்திய தாக்கத்தால் மிஸ்ட்ரி உயிர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்குப் பிறகு மும்பை காவல்துறை போக்குவரத்து குறித்தான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


 






அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சொகுசு காரில் திரும்பி கொண்டிருந்த டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் காரானது பால்கர் என்ற இடத்தில் சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்துக்குள்ளான காரில் 4 பேர் இருந்தனர். சம்பவ இடத்திலேயே சைரஸ் மிஸ்திரி உட்பட இருவர் உயிரிழந்தனர்


சைரஸ் மிஸ்திரி  1968 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் அயர்லாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர். பள்ளி படிப்பை மும்பையில் படித்த இவர், பட்டப்படிப்பை லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் முடித்தார். 2011 ஆம் ஆண்டு, டாடா சன்ஸ் குழுமத்தின் துணை தலைவராக பொறுப்பேற்றார்.


மேலும் டாடா இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா பவர், டாடா டெலிசர்வீசஸ், இந்தியன் ஹோட்டல்கள், டாடா குளோபல் பானங்கள் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் உள்ளிட்ட அனைத்து முக்கிய டாடா நிறுவனங்களின் தலைவராகவும் இருந்தார்.


பின்னர் 2012 ஆம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ரத்தன் டாடா விலகியதையடுத்து, தலைமைப் பொறுப்பிற்கு சைரஸ் மிஸ்திரி தேர்வு செய்யப்பட்டார். வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர், டாடா குழுமத்தின் தலைமை பொறுப்பேற்றது முதல் முறையாகும்.


2016 ஆம் ஆண்டு, டாடா குழுமத்தின் தலைமை பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இவரின் தந்தை பலோன்ஜி ஷபூர்ஜி மிஸ்திரி கடந்த ஜூன் மாதம் 29-ஆம் தேதி காலாமானார். இவர் டாடா நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்திருர்ந்தார். பலோன்ஜி ஷபூர்ஜி மிஸ்திரி கடந்த 2016 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதை பெற்றார்.


இந்நிலையில் சைரஸ் மிஸ்திரியின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.