அமைச்சர் கைது:


ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. ஹவாலா பரிமாற்றம் தொடர்பான  வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார்.


புகார்:


டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி தொடர்பாக சத்யேந்திர ஜெயின் குடும்பத்தினர் மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்களில் ரூ.4.51 கோடியை அமலாக்கத்துறை சமீபத்தில் முடக்கியது. பரிவர்த்தனை மோசடி தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 


பொய் வழக்கு:


சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா, பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இமாச்சல் பிரதேசத்தில் மாநில தேர்தல் நடைபெற உள்ளதால், ஆம் ஆத்மி கட்சியின் மீது தவறான எண்ணத்தை உருவாக்கும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. இமாச்சல சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற எண்ணம் பாஜகவிற்கு வந்து விட்டது. அதனால் தான் இத்தகைய மறைமுக தாக்குதலை எதிர்க்கட்சியின் மீது பாஜக தொடுக்கிறது. இதே போன்று தான் அமலாக்கத்துறை, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சத்யேந்திர ஜெயினை விசாரணை செய்தது. ஆனால் அப்போது எதுவும் கண்டறிய முடியாததால் விடுதலை செய்தது. தற்போது தேர்தல் வருவதையொட்டி, இது போன்ற பொய்யான வழக்கில் கைது செய்யும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுவதாக மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.