சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கவுள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காக ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 


மகரவிளக்கு பூஜை 


கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம், 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர்.


இதனிடையே மண்டல பூஜை நிறைவடைந்து டிசம்பர் 27 ஆம் தேதி நடை அடைக்கப்பட்டு 3 நாட்கள் கழித்து டிசம்பர் 30 ஆம் தேதி மகரவிளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது.  ஜனவரி 14 ஆம் தேதியான இன்று மகரஜோதி நடக்கவுள்ள நிலையில், ஏற்கனவே அதற்கான முன்பதிவு முடிந்துவிட்டது.


இன்று மாலை 6.20 மணிக்கு பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்துள்ளனர். அங்கு பல பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். இதனால் சபரிமலை முழுக்க சரண கோஷம் தான் ஒலிக்கிறது. 






பாதுகாப்பு ஏற்பாடுகள் 


மகரஜோதி தரிசனம் காண பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தங்கியிருக்கும் வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவாமல் தடுக்க ரோந்து பணியை முடக்கி விட்டுள்ளனர். மேலும் எருமேலி - கரிமலை சாலை, புல்லுமேடு பகுதியில் கூடுதல் தீயணைப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பம்பை மற்றும் சன்னிதானத்தில் வனத்துறைக்கு சொந்தமாக 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றது. 


அதேபோல் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க தனி குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பன்றிகள் பிடித்து வேறு இடத்திற்கு மாற்றும் பணியில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது. இதுவரை 80க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் வாழ்விடங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், இதுவரை அதிக விஷமுள்ள 120 பாம்புகள் பிடிபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


சபரிமலையில் வனக்காவலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கால்நடை மருத்துவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில்  ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையிலிருந்து கடந்த ஜனவரி 12 ஆம் தேதி புறப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு இன்று சபரிமலை வந்தடைகிறது.


பின்னர் மாலை 6.30 மணிக்கு தங்க ஆபரணங்கள்  அணிவிக்கப்பட்டு இதன் பூஜைகள் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்படும் நெய் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இன்று இரவு 11.30 மணி வரை நடை திறந்திருக்கும் என்றும், அதன்பிறகு நாளை காலை தான் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.