சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில், பக்தர்களுக்கு தேவசம் போர்டு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 


சபரிமலை ஐயப்பன் கோயில் 


கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. கொரோனா தொற்று கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்த இந்த முறை அத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 


நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம், 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், கேரளா, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவருக்கும் தேவசம் போர்டு சார்பில் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது. 


அதேசமயம் சன்னிதானம் பகுதியில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தரிசனம் செய்யும் பக்தர்களை உடனடியாக பக்தர்களை வெளியேற்ற காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 


 மகரஜோதி தரிசனம்


மண்டல பூஜை நிறைவடைந்து டிசம்பர் 27 ஆம் தேதி நடை அடைக்கப்பட்டு 3 நாட்கள் கழித்து டிசம்பர் 30 ஆம் தேதி மகரவிளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது. ஜனவரி 14 ஆம் தேதியான இன்று மகரஜோதி நடக்கவுள்ள நிலையில், ஏற்கனவே நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பக்தர்கள் வீதம் அனுமதிக்கும் வகையிலான முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. இன்று மாலை 6.20 மணிக்கு பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். 


மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்துள்ளனர். அங்கு பல பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். கடந்த 56 நாட்களில் சபரிமலையில் 43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.310 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேசமயம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையிலிருந்து கடந்த ஜனவரி 12 ஆம் தேதி புறப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு இன்று சபரிமலை வந்தடைகிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு தங்க ஆபரணங்கள்  அணிவிக்கப்பட்டு இதன் பூஜைகள் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்படும் நெய் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இன்றைய தினம் இரவு 11.30 மணி வரை நடை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு


மகரஜோதி தரிசனம் முடிந்து விட்டு மலையிலிருந்து கீழிறங்கும் பக்தர்கள் மற்றவர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இறங்க வேண்டுமெனவும், பிற பக்தர்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் எனவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.