ஏர் இந்தியா நிறுவனத்தை அரசிடமிருந்து பெற்றுக் கொண்ட டாடா குழுமம் அதன் வாடிக்கையாளர்களை ரத்தன் டாடாவின் சொந்தக் குரலில் வரவேற்றுள்ளது.


18 விநாடிகள் ஒலிக்கும் ரத்தன் டாடாவின் குரல் ஏர் இந்தியாவின் ட்விட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது.


அதில் டாடா குழுமம் ஏர் இந்தியாவின் புதிய வாடிக்கையாளர்களை வரவேற்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்தை விமானப் பயணிகள் விரும்பி தெரிவு செய்யும் நிறுவனமாக மாற்றப்போவதில் மகிழ்ச்சி கொண்டுள்ளது. பயணிகளுக்கான சேவை, சவுகரியம் மூலம் இது நிறைவேறும் என்று ரத்தன் டாடா பேசியிருக்கிறார்.





ஜேஆர்டி டாடாதான் விமான நிறுவனங்களை நிறுவி 1932இல் இந்திய விமான சேவையை துவக்கி முதல் விமானத்தை இயக்கினார். டாட்டா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஏர் கார்பரேஷன்ஸ் சட்டத்தை நிறைவேற்றியது, டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெரும்பான்மை பங்குகளை வாங்கியது.  


1994 ஆண்டு வரை நாட்டின் ஒரே விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. அதன்பின்னர் தாராளமயமாக்கல் கொள்கையால் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன.


அதுவரை, லாபத்தில்தான் இயங்கி வந்த நிறுவனம். தனியார் விமான நிறுவனங்களின் போட்டி, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பு, அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகப்படியான சலுகைகள் போன்றவற்றின் காரணமாக இழப்பை சந்தித்தது.


முதல் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் முதல், இரண்டாவது இடத்தைப் பிடித்தன. இந்த நிலையில் நிறுவனம் ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டத்திலும் ரூ.55 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் கடனிலும் உள்ளதால், ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை இந்திய அரசு எடுத்தது. தற்போது ஏர் இந்தியா, டாடா நிறுவனத்தின் வசமே சென்றுள்ளது.


ஏர் இந்தியா விமானங்களில் வழங்கப்படும் உணவு சேவைகளில் உடனடி மாற்றங்கள் வந்துள்ளன. பயணிகளை கவனிப்பது, பத்திரிகைகள் வழங்குவது என விமானத்தில் பல மாற்றங்கள் அதிரடியாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. விமான சிப்பந்திகள் அனைவரும் நேர்த்தியான உடையணிந்து, ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.