பாதுகாப்பு படைகளின் தடையற்ற தளவாட மேலாண்மை - ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியில் ஒரு தீர்க்கமான காரணியாக இருந்தது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

"ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்கு இதுதான் காரணம்"

குஜராத் வதோதராவைச் சேர்ந்த கதி சக்தி விஸ்வவித்யாலயா (ஜிஎஸ்வி) பட்டமளிப்பு விழாவில் மெய்நிகர் வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இன்றைய சகாப்தத்தில், போர்கள் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களால் மட்டுமல்ல, அவற்றின் பொருத்தமான தருண விநியோகத்தாலும் வெல்லப்படுகின்றன என்றும், ஆபரேஷன் சிந்தூர் சிறந்த தளவாட மேலாண்மைக்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொருட்களை விநியோகிப்பதற்கான ஒரு செயல்முறையாக மட்டுமல்லாமல், உத்திசார்  முக்கியத்துவம் வாய்ந்த கண்ணோட்டம் வாயிலாக தளவாட மேலாண்மையைப் பார்க்க வேண்டும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் வலியுறுத்தினார்.

"எல்லையில் போராடும் வீரர்களாக இருந்தாலும் சரி, பேரிடர் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களாக இருந்தாலும் சரி, ஒருங்கிணைப்பு அல்லது வளங்களை முறையாக நிர்வகிக்காமல் இருந்தாலும் சரி, வலுவான நோக்கங்கள் கூட பலவீனமடைகின்றன.

ரகசியம் உடைத்த ராஜ்நாத் சிங்:

தளவாடங்கள் என்பது குழப்பத்தைக் கட்டுப்படுத்தும் வலு கொண்டவை. ஆயுதங்களால் மட்டுமல்ல, சரியான நேரத்தில் வழங்கப்படும் ஆதாரவள மேலாண்மையாலும் வலிமை அளவிடப்படுகிறது. போர், பேரிடர் அல்லது உலகளாவிய தொற்றுநோய் என எதுவாக இருந்தாலும், அதன் தளவாடத் திறனை வலுவாக வைத்திருக்கும் நாடு மிகவும் நிலையானது, பாதுகாப்பானது மற்றும் திறமையானது" என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில் 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் விருப்பங்களுக்கு உத்வேகம் அளிப்பதில் ஜிஎஸ்வி போன்ற நிறுவனங்கள் வகிக்கும் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் தளவாடங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ராஜ்நாத் சிங், இது உற்பத்திக்கு முந்தைய நிலையிலிருந்து நுகர்வு வரை ஒவ்வொரு படியையும் இணைக்கும் முக்கிய தூண்களில் ஒன்று என அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தளவாடங்களின் பங்களிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். கோவிட் காலத்தில் லட்சக்கணக்கான தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் தேவைப்படும் நேரத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்றடைந்தபோது அது வகித்த முக்கிய பங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்கட்டமைப்பு வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும், முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் மேற்கொள்ளப்படும் இந்த மாற்றத்திற்கான அடித்தளம் கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் தொலைநோக்குத் திட்டங்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன் தாக்கம் வெறுமனே கட்டமைப்பு இணைப்பிற்கு மட்டுமல்ல, பொருளாதார உற்பத்தித்திறனை அதிகரித்துள்ளது, தளவாடச் செலவைக் குறைத்துள்ளது மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.