நிர்வாக வசதிகளுக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் 17 புதிய மாவட்டங்கள் உதயமாகியுள்ளன.


ராஜஸ்தான் தேர்தல்:


காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் இடையே அங்கு நேரடிப்போட்டி நிலவி வருவதால், இப்போதே அங்கு தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு தேர்தலைமையமாக கொண்டு பல்வேறு அதிரடி திட்டங்களையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.


ஒரே நாளில் 17 மாவட்டங்கள்:


அதன் ஒரு பகுதியாக தான் நிர்வாகப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் தற்போதுள்ள மாவட்டங்களை பிரித்து, புதியதாக 17 மாவட்டங்களை ராஜஸ்தான் அரசு உருவாக்கியுள்ளது. அந்த மாவட்டங்களுகான அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை முதலமைச்சர் அஷோக் கெலாட் இன்று அறிமுகப்படுத்தினார். இதன் மூலம், ராஜஸ்தானில் இருந்த 33 மாவட்டங்களின் எண்ணிக்கை தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், உத்தரப்பிரதேசம் (75), மத்தியப் பிரதேசம் (52) ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, நாட்டிலேயே அதிக மாவட்டங்களைக் கொண்ட மூன்றாவது மாநிலமாக  ராஜஸ்தான் உருவெடுத்துள்ளது. 


ராமதாஸ் கோரிக்கை:


ராஜஸ்தான் அரசு எடுத்துள்ள நடவடிக்கையை குறிப்பிட்டு, தமிழக அரசும் நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பான ட்விட்டர் பதிவில் “சிறியவையே அழகு என்ற தத்துவத்தின் அடிப்படையில் பெரிய மாவட்டங்களை பிரித்து சிறிய மாவட்டங்களாக்க வேண்டும்; அது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துணை புரியும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  12 லட்சம் பேருக்கு  ஒரு  மாவட்டம் வீதம் 60 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்பது தான்  பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இதை  செயல்படுத்த தமிழக அரசு தாமதித்து வரும் நிலையில்,  ராஜஸ்தான் அரசு முந்திக் கொண்டது. புதிய மாவட்டங்கள்  உருவாக்கப்பட்ட பிறகு  ராஜஸ்தான் மாவட்டங்களின் சராசரி மக்கள்தொகை 13 லட்சம். ஆனால், தமிழக மாவட்டங்களின் சராசரி மக்கள்தொகை 19 லட்சமாக உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 25. மாவட்டங்களின் எண்ணிக்கை 50. அதாவது ஒரு மக்களவைத் தொகுதியில் இரு மாவட்டங்கள் அடங்கியுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் ஒரே மாவட்டத்தில்  3 மக்களவைத் தொகுதிகள் பரவிக் கிடக்கின்றன. இந்த அளவுக்கு பரந்து விரிந்த மாவட்ட எல்லைகளை வைத்துக் கொண்டு எவ்வாறு சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும்? என்பதை தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா என மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை அமைத்த மாநிலங்கள் அனைத்திலும் வளர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடும் அதிவேக வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் உள்ள பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட வேண்டும். இது குறித்து ஆய்வு செய்து தமிழக அரசுக்கு பரிந்துரைக்க தமிழ்நாடு மாவட்ட மறுசீரமைப்பு ஆணையத்தை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.