இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வெடித்த வன்முறையைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவரும் நாட்டை விட்டு தப்பி ஓட முயற்சித்து வருகின்றனர். மஹிந்த ராஜபக்சே இன்று காலை பிரதமர் மாளிகையில் இருந்து பலத்த ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறிய நிலையில், அவரது மகன் நமல் ராஜபக்சேவின் மனைவி லிமிஷா வீரசிங்கே இன்று தனது வீட்டில் இருந்து தப்பி ஓடினார்.






கொழும்புவில் உள்ள தனது வீட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக லிமிஷா வீரசிங்கே தப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இலங்கையில் அமைந்துள்ள கோத்தபய ராஜபக்சேவின் அரசுக்கு எதிராக அறவழியில் அமைதியாக போராடிய மக்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதலை நடத்தத் தொடங்கினார். இதனால், மக்களின் கோபத்திற்கு இலங்கை அரசு ஆளாகியது.


இதனால் ஏற்பட்ட பெரும் வன்முறையால் 35 அமைச்சர்கள் வீட்டை போராட்டக்காரர்கள் தீக்கிரையாக்கினர். ராஜபக்சேவின் பழமையான வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த சூழலில் உயிருக்கு பயந்து ராஜபக்சே விமானம் மூலமாக வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக, நைஜீரியாவில் இருந்து விமானம் ஒன்று காலை இலங்கையின் கட்டுநாயகா விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.




தற்போது, ராஜபக்சே குடும்பத்தினர் அனைவரும் திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் அங்கே பதுங்கியிருப்பதை அறிந்த பொதுமக்கள் ராஜபக்சே குடும்பத்தினர் நாட்டைவிட்டு தப்பி ஓடக்கூடாது என்று கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.