எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் வாழ்த்து கூறியிருந்தார். "புதிய பொறுப்பை ஏற்றுள்ள ராகுல் காந்திக்கு இந்தியா கூட்டணி சார்பில் வரவேற்கிறேன். அவரது குரல் மக்கள் மன்றத்தில் (லோக்சபா) தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும்" என ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.


"அன்பு சகோதரர் ஸ்டாலின்" இதற்கு நன்றி தெரிவித்த பதிவிட்ட ராகுல் காந்தி, "என் அன்புச் சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.


 






தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் கேட்கப்படுவதை உறுதி செய்வோம், மேலும், நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்துவோம்" என்றார். 


தொடர் தோல்வியை சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் திருப்புமுனையாக அமைந்தது. கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி சட்டப்பேரவை தேர்தல் வரை பல்வேறு மோசமான தோல்விகளை அக்கட்சி சந்தித்தது.


மீண்டெழுந்த காங்கிரஸ்: இந்த தேர்தலிலும் படுதோல்வியே மிஞ்சும் என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டாலும் அதை எல்லாம் பொய்யாக்கி 99 இடங்களை கைப்பற்றியது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் 44 தொகுதிகளிலும் 2019 மக்களவை  தேர்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.


ஆனால், எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற 54 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதனால், கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கொடுக்கப்படாமல் இருந்தது. இச்சூழலில், இந்த தேர்தலில் போதுமான இடங்களில் வெற்றி பெற்றதால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது.


ஆனால், எதிர்க்கட்சி தலைவராக யார் வருகிறார் என்பதில் தொடர் சஸ்பென்ஸ் நீடித்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பங்காற்றிய ராகுல் காந்திக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்பினர். காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.