அரசு பணியாளர்களை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் பணியில் எடுக்காமல் ஆர்.எஸ்.எஸ் மூலம் எடுத்து அரசியலமைப்பின் மீது பிரதமர் மோடி தாக்குதல் நடத்தி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.


இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி? உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகளை லேட்டரல் என்ட்ரி நடைமுறை மூலம் எடுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தி, "மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள முக்கியமான பதவிகளில் லேட்டரல் என்ட்ரி மூலம் ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் SC, ST மற்றும் OBC பிரிவினரின் இடஒதுக்கீடு வெளிப்படையாகப் பறிக்கப்படுகிறது.


நாட்டின் உயர்மட்ட அரசு பதவிகள் உள்பட அனைத்து உயர் பதவிகளிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவம் பெறவில்லை என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இதை மேம்படுத்துவதற்கு பதிலாக, லேட்டரல் என்ட்ரி மூலம் அவர்கள் உயர் பதவிகளில் இருந்து மேலும் ஒதுக்கப்படுகிறார்கள்.


இது, யுபிஎஸ்சிக்கு தயாராகும் திறமையான இளைஞர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகவும், ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதியின் மீதான தாக்குதலாகவும் உள்ளது.


பகீர் கிளப்பும் ராகுல் காந்தி: ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முக்கிய அரசாங்க பதவிகளை ஆக்கிரமிப்பதன் மூலம் என்ன செய்வார்கள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் செபி அமைப்புதான். அங்கு முதல்முறையாக தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


 






நிர்வாக அமைப்பு மற்றும் சமூக நீதி என இரண்டையும் நாசமாக்கும் இந்த தேச விரோத நடவடிக்கையை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்க்கும். இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர, 'ஐஏஎஸ் தனியார்மயமாக்கல்' என்பதே 'மோடியின் உத்தரவாதம்'.


யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்குப் பதிலாக 'ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்' மூலம் அரசு ஊழியர்களை நியமிப்பதன் மூலம் நரேந்திர மோடி அரசியலமைப்பை தாக்கி வருகிறார்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.