அடுத்த மாத இறுதியில், மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், அரசியலில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. பல்வேறு கட்சி தரப்பிலும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுகிறது. 


பாஜகவுக்கு தாவிய விஜயதரணி:


இந்த சூழலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளது பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்த கே.எஸ் அழகிரிக்கு பதிலாக செல்வப்பெருந்தகையை புதிய தலைவராக காங்கிரஸ் கடந்த வாரம் நியமனம் செய்தது.


இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ விஜயதரணி பாஜகவில் இணைகிறார் என்ற தகவல் கடந்த இரண்டு வாரங்களாக பரவி வந்தது. ஆனால், அந்த தகவல் வதந்தியே, உட்கட்சி பூசல் எதுவும் இல்லை என காங்கிரஸ் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.


வைரலாகும் ராகுல் காந்தி வீடியோ:


வெளியான வதந்திகளை உண்மையாக்கும் விதமாக மத்திய இணை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் தலைமையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பாஜகவில் இன்று இணைந்தார். இதையடுத்து, அவர் காங்கிரஸ் கட்சி அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். 


இந்த நிலையில், ராகுல் காந்தி பேசும் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், "எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள். உங்களுக்கு ஆர்எஸ்எஸ் தான் சரியான இடம்" என ராகுல் காந்தி பேசுவது பதிவாகியுள்ளது. விஜயதாரணி, பாஜகவுக்கு தாவிய அதே நாளில், இந்த வீடியோவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. 






காங்கிரஸ் கட்சியில் இருந்து விஜயதாரணி விலகியது ஏன்?


கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற வசந்தகுமார், 2020ஆம் ஆண்டு, கொரோனா பாதிப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது அந்த தொகுதியில் போட்டியிட விஜயதரணி விரும்பியதாகவும் காங்கிரஸ் மேலிடத்திடம் வாய்ப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.


ஆனால் கட்சித் தலைமை விஜயதரணிக்கு வாய்ப்பு கொடுக்காமல் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்திற்கு வாய்ப்பு கொடுத்து. அவரும் வெற்றி பெற்றார். அப்போதில் இருந்தே, காங்கிரஸ் தலைமை மீது விஜயதரணி அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.