குற்றம் செய்பவர்கள் தாங்கள் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதற்கும், மனம் திருந்தி வாழ்வதற்கான இடமாக சிறை இருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் பலரின் விருப்பமாக உள்ளது. அதேசமயம், பல ஆண்டுகள் சிறையில் குடும்பத்தை விட்டு தனியாக கம்பிகளுக்கு பின்னால் வாடுபவர்கள் மனதளவில் கடுமையான பாதிப்பை  சந்திக்க நேரிடும். இதனால், அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் இடையேயான இடைவௌி அதிகரிக்கிறது.


இந்த நிலையில், இந்த இடைவெளியை குறைக்கும் விதமாகவும், கைதிகளின் திருமண பந்தத்தை வலுப்படுத்தும் விதமாக புதிய முன்னெடுப்பை பஞ்சாப் அரசு எடுத்துள்ளது. பஞ்சாபில் அமைந்துள்ளது லூதியானா. இங்குள்ள சிறையில் உள்ள கைதிகள் தங்களது மனைவிகளை சிறையின் உள்ளேயே சந்திப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.


சிறையில் நல்லொழுக்கத்துடன் நடந்து கொள்ளும் கைதிகளுக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்கப்படுகிறது. இதன்படி, கைதிகள் தங்களது மனைவிகளை சிறையில் இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள தனி அறையில் சந்திக்கலாம். அந்த அறையிலே பாத்ரூம் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இவ்வாறு கைதிகள் தங்களது மனைவியை சந்தித்துக்கொள்ளலாம். கைதிகள் தங்களது மனைவிகளை தனியாக சந்தித்துக்கொள்வதற்கு 2 மணிநேரம் அவகாசம் வழங்கப்படுகிறது.


சிறையில் நல்லொழுக்கத்துடன் நடந்துகொள்ளும் கைதிகள் மட்டுமின்றி, நீண்டகாலமாக சிறையிலே வசிக்கும் கைதிகளுக்கே இந்த சலுகைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் சிறை நிர்வாகம் கூறியுள்ளது. இவ்வாறு தங்களது கணவர்களை சந்திக்கச் செல்லும் மனைவிகள் திருமணம் ஆனதற்கான ஆதாரம், மருத்துவச் சான்றிதழ், ஹெச்.ஐ.வி. இல்லா சான்றிதழ், பாலியல் தொடர்பான நோய் இல்லை என்பதற்கான ஆதாரம், கொரோனா சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.  




நாட்டிலே இந்த திட்டத்தை முதன்முறையாக தொடங்கியுள்ள மாநிலம் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாநில அரசு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தது. இதன்படி, லூதியானா சிறையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகை அனைத்து கைதிகளுக்கும் பொருந்தாது. கொடூரமான குற்றங்கள் செய்தவர்கள், தாதாக்கள், மிகவும் ஆபத்தான கைதிகள், பாலியல் குற்றத்தில் சிக்கிய குற்றவாளிகள் ஆகியோருக்கு இந்த சலுகைகள் அளிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தின் மூலமாக சிறையில் உள்ள கைதிகளின் மண வாழ்க்கை மற்றும் குடும்ப உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என்று நம்புவதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க : ஐஐடியில் பரபரப்பு.. மாணவி குளிப்பதை வீடியோ எடுத்ததாக ஊழியர் கைது.. மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா?


மேலும் படிக்க : ”ஐடி மாப்பிள்ளைகள் ஃபோன் பண்ணாதீங்கப்பா” : வைரலான போஸ்ட்.. கல்யாண வரன் தேடல் பரிதாபங்கள்..