மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மருத்துவருக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. புனித் ராஜ்குமாருக்கு கடைசி நிமிடத்தில் சரிவர சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதே மரணத்துக்குக் காரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனை அடுத்து அவருக்கு சிகிச்சை அளித்த ரமனா ராவ் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக போலீஸ் அவருக்கு ஒரு படை அளவிலான காவலர்களை அவர் வீட்டின் முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தியுள்ளது. 


நடிகர் புனீத் ராஜ்குமாரின் மரணம் என்பது கன்னடத் திரையுலகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த கர்நாடகத்தாலுமே ஏற்றுக்கொள்ள முடியாததாகத்தான் உள்ளது. புனித் ராஜ்குமார் கன்னடத் திரையுலகத்தில் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். ’A Man with no haters’ என்கிறது அவரை அறிந்த வட்டாரங்கள். 2002ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் அப்பு திரைப்படம் மூலம் அறிமுகமான புனித் ராஜ்குமார்.அதன்பிறகு அதே பெயராலேயே அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டார். புனித் ராஜ்குமார் மறைந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல், அவரது ரசிகர்கள் இருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.





அதேபோல், புனித் ராஜ்குமாரின் ரசிகரான ராகுல் என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது வீட்டில் இருந்த புனித் ராஜ்குமாரின் உருவப்படத்திற்கு மலர்களால் அஞ்சலி செலுத்திவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒருவரின் இழப்பு அவரை பற்றி அறியாதவர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  புனித் ராஜ்குமாரின் உடல் பெங்களூருவில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஸ்ரீகண்டீரவா ஸ்டுடீயோவில் உள்ள பெற்றோர் நினைவிடம் அருகிலேயே அவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ஏராளமான பொதுமக்கள், ரசிகர்களும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்கள்.கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் 46 வயதான புனித் ராஜ்குமார் கடந்த 29ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில மணி நேரங்களில் உயிரிழந்தார்.