நாடு முழுவதும் இன்று காதலர் தினத்தை பலரும் கொண்டாடி வரும் அதே வேளையில், இந்தியாவின் கருப்பு நாளாகவும் இந்த பிப்ரவரி 14-ந் தேதி இருந்து வருகிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஜம்மு காஷ்மீரின் தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது லெத்போரா.


புல்வாமா தாக்குதல்:


இங்கு கடந்த 2019ம் ஆண்டு சி.ஆர்.பி.எப். படைக்குச் சொந்தமான வாகனத்தில் நமது நாட்டின் சி.ஆர்.பி.எப். வீரர்கள் இந்த சாலையில் பாதுகாப்பு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக எங்கிருந்தோ வந்த வாகனம் நமது பாதுகாப்பு படை வீரர்கள் வாகனத்தில் மோதியது.




வெடிமருந்துகள் நிரம்பிய அந்த வாகனத்தை பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த அடீல் அகமது தர் என்ற தீவிரவாதி ஓட்டிவந்து திட்டமிட்டு நமது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளான். திட்டமிட்டு அவன் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படையைச் சேர்ந்த 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.


துயரத்தில் மூழ்கிய இந்தியா:


அன்றைய தினம் பிற்பகல் 3.10 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் சோகத்தில் மூழ்கியது. அமைதியையும், சகோதரத்துவத்தையும் எப்போதும் விரும்பும் இந்தியா பாதுகாப்பு வீரர்கள் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்கள் மீதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு தக்க பதிலடி அளிக்க வேண்டும் என்றும் அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.


அடுத்தடுத்த விசாரணையில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தீவிரவாதி புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் நடந்த 4 நாட்களுக்கு பிறகு சி.ஆர்.பி.எப்., ராஷ்ட்ரிய ரைபிள் மற்றும் எஸ்.பி.ஜி. படையினர் இணைந்து நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். புலவாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் ரஷீத்காசி என்பவனையும் சுட்டுக்கொன்றனர்.




2016ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு தக்க பதிலடி அளிக்கும் வகையில் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்றே நடத்தியது.


பாலகோட் தாக்குதல்:


புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக ஆசாத் காஷ்மீர் எனப்படும் ஆக்கிரமிப்பு காஷ்மீரான பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேரடி தாக்குதலை நடத்தியது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ-2000 ரகத்தைச் சேர்ந்த 12 போர் விமானங்கள், பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பாலகோட்டில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது 1000 கிலோ ஸ்பைஸ் 2000 ரக வெடிகுண்டுகளை வீசியது. வீரமரணம் அடைந்த 40 வீரர்களின் மரணத்திற்கு காரணமான பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர்.


இந்த துயரம் நடந்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் ஆகிறது. இன்றும் நமது நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அந்த மாவீரர்களை நாடும், நாமும் போற்றுவோம்.