மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்தக்கசிவு காரணமாக சிகிச்சைப் பெற்று வரும் சத்குரு ஜக்கி வாசுதேவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். 


கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தின் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். உலகளவில் மண்வள பாதுகாப்பு விழிப்புணர்வை 100 நாட்களில் 27 நாடுகளுக்கு பைக்கில் பயணம் செய்தார். 30 ஆயிரம் கி.மீ., பைக்கில் சென்றார். இதனிடையே கடந்த மார்ச் 8 ஆம் தேதி நடைபெற்ற மகா சிவராத்திரி விழா கோவையில் உள்ள ஈஷா மையத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 


இதில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்ற நிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதனிடையே மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்தக்கசிவு காரணமாக ஜக்கி வாசுதேவ் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


சிறிது காலமாகவே ஒற்றை தலைவலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த சத்குருவுக்கு கடந்த 14ஆம் தேதி அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டு, கடுமையான வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பாதுகாவலர்கள் சத்குருவை உடனடியாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்த போது, மூளையின் ஒருபகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.






மூளை நரம்பியல் நிபுணர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து மூளையில் இருந்த ரத்தக்கசிவை சரி செய்தனர். இதையடுத்து வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த சத்குரு, தற்போது வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு விரைவாக குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சத்குரு ஜக்கி வாசுதேவ்  குணமடைய பிரபலங்களும், ஈஷா பக்தர்களும் தாங்கள் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக சத்குரு ஜக்கி வாசுதேவை தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை குறிப்பிட்டு பதிலளித்துள்ள அவர், “அன்புள்ள பிரதமர் அவர்களே.. நான் உங்களுக்கு ஒரு கவலையாக இருக்கக் கூடாது. நீங்கள் வழிநடத்துவதற்கு ஒரு தேசம் உள்ளது. நான் மீண்டு வரும் உங்கள் நலம் விசாரிப்பால் நெகிழ்ச்சியடைந்தேன்” என தெரிவித்துள்ளார்.