பிரதமர் மோடி ஏப்ரல் 9ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள முதுமலை யானைகள் காப்பகத்திற்கு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


முதுமலை வரும் பிரதமர் மோடி:


முதுமலைக்கு ஏப்ரல் 9ம் தேதி  பிரதமர் நரேந்திர மோடி வர உள்ளதாக,  மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். இந்த வருகையின்போது, ஆஸ்கர் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் எனும் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் மற்றும் பெல்லியை பிரதமர் சந்தித்து கலந்துரையாட  உள்ளதாகவும் கூறியுள்ளார். அண்மையில் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்தின் இயக்குனர் கார்த்திகி கான்ஸ்லேவ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்தார். அதைத்தொடர்ந்து பொம்மன், பெள்ளியையும் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


கவனத்தை ஈர்த்த பொம்மன் - பெல்லி தம்பதி:


குனீத் மோங்கா தயாரிப்பில், கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கத்தில் உருவான ”தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” படம் யானைகளை பிள்ளைகள் போல வளர்த்து வந்த தம்பதியர் பற்றிய கதை. நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் காப்பகத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெல்லி என்ற தம்பதி இரண்டு குட்டி யானைகளை மிகவும் பாசத்துடன் தாய் தந்தையை போன்று இருந்து வளர்த்து வருகிறார்கள்.


அவர்களிடம் அந்த யானை குட்டிகள் எப்படி பழகுகிறது? அவர்கள் எப்படி அவற்றை பராமரிக்கிறார்கள்? என்பது தான் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்தின் கதை. படத்தில் யானைகளையும் தாண்டி பொம்மன், பெல்லி தம்பதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். 


முதல் ஆவணப்படம் என்ற பெருமை : 


இப்படம் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்று சிறந்த ஆவணப்படத்திற்கான பிரிவில் விருதை வென்றது. ஒரு ஆவணப்படத்திற்காக இந்தியா ஆஸ்கர் விருது பெற்ற முதல் படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த இப்படத்திற்கு உலகத்தின் அனைத்து மூலைகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 


பிரதமரை சந்தித்த கார்த்திகி கோன்சால்வ்ஸ்:


இந்நிலையில் ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா மற்றும் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் இருவரும் பிரதமர் மோடியை ஆஸ்கர் விருதுடன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் “தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படத்தின் சினிமாட்டிக் புத்திசாலித்தனமும் வெற்றியும் உலக அளவில் கவனத்தை ஈர்த்து அனைவரது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குவித்துள்ளது. இன்று இந்த அருமையான குழுவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்கள் இந்தியாவை பெருமை படுத்தி உள்ளார்கள்" என பதிவிட்டுள்ளார். அதோடு, ஆஸ்கர் விருதுகளை தனது கைகளால் பிடித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.