கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு மும்முரமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 28ஆம் தேதி ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 17 கடைசித் தேதி ஆகும். 


நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொது துறை நிறுவன பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக மத்திய அரசு சார்பில் கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. எனினும் காலி இடங்கள் இருந்தால், பொதுத் தரப்பினருக்கும் இடம் வழங்கப்படுகிறது. குறைந்த செலவில் தரமான கல்வி என்பதால், கே.வி. பள்ளிகளில் சேர்க்க எதிர்பார்ப்பு அதிகம். எம்.பி. ஒதுக்கீட்டின்கீழ் இதுநாள் வரை இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த முறை நிறுத்தப்பட்டது. 


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பள்ளிகள்


இந்தியா முழுவதும் மொத்தம் 1,245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், வெளிநாட்டில் 3 பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. 


முன்னதாக ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே, கே.வி., பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கிடையில், 2020 புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, 5 ஆக இருந்த குறைந்தபட்ச வயது, 6 ஆக உயர்த்தப்பட்டது. இதன்படி 1ஆம் வகுப்பில் சேர மார்ச் 31ஆம் தேதி அன்று, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 6 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். 




மார்ச் 27 முதல் விண்ணப்பப் பதிவு


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 27ஆம் தேதி ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இவர்கள் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 7 மணி வரை விண்ணப்பிக்கலாம். 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு ஆஃப்லைன் முறையில் ஏப்ரல் 3ஆம் தேதி விண்ணப்பப் பதிவு ஆரம்பிக்கிறது. நேரடி முறையில் நடைபெறும் இந்த விண்ணப்பப் பதிவுக்கு ஏப்ரல் 12ஆம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


மாணவர்களின் பட்டியல் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும். இவர்களுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு நீங்கலாக அனைத்து வகுப்புகளுக்குமான மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 30ஆம் தேதி கடைசி ஆகும். 


என்னென்ன ஆவணங்கள் தேவை?


* பிறப்புச் சான்றிதழ்
* மாணவரின் புகைப்படம்
* இரண்டு ஆவணங்களும் அதிகபட்சம் 256 கே.பி. ஆக இருக்க வேண்டும். .jpeg அல்லது .pdf வடிவில் புகைப்படங்கள் இருக்க வேண்டியது அவசியம். 


வழிமுறைகள் குறித்து முழுமையாக அறிய https://kvsonlineadmission.kvs.gov.in/instruction.html என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.