பாஜகவின் கோட்டைகளில் ஒன்றாக கருதப்படும் மத்தியப் பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக, பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், 15 மாதங்களிலேயே கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சி அமைத்தது.


பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று, ஆட்சி நடத்தி வருகிறார். மத்திய பிரதேச சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் நவம்பர் 17ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. அங்கு, ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜக தலைவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி தொடங்கி பாஜக மூத்த தலைவர்கள் பலர், அங்கு சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


"ஊழல் கோட்டையை கட்டிய காங்கிரஸ்"


இந்த நிலையில், நீமுச் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.


"காங்கிரஸ் கட்சிக்கு பகவான் ராமர் கற்பனை கதாபாத்திரம். காங்கிரஸ், நாட்டிற்கு எப்போதுமே பிரச்னைகளை உருவாக்கி வருகிறது. அதற்கான தீர்வுகளை அளிப்பதில்லை. மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தும் கொள்கையை பின்பற்றி, நாட்டை ஆட்சி புரிந்து வந்தது. அரசு நிர்வாகத்தில் நேர்மைக்கும் நெறிமுறைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தேச பிதா காந்தி  வலியுறுத்தினார். 


நாட்டில் ராம ராஜ்ஜியத்தை (சிறந்த ஆட்சி) கொண்டு வர வேண்டும் என விரும்பினார். ஆனால், ஒருபுறம் ஊழல் கோட்டையை கட்டிய காங்கிரஸ், மறுபுறம் ராமரை கற்பனைக் கதாபாத்திரமாக அறிவித்தது. மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் போது ஊழலில் புதிய சாதனைகளை படைத்தது.


"இந்தியாவுக்கு எதிராக வெளிப்படையாக சதி செய்யும் வெளிநாட்டவர்களுடன் காங்கிரஸ் கூட்டு"


நாடுகளின் கூட்டுறவில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்து வருகிறது. ஆனால், இந்த உலகளாவிய ஏற்றம் காங்கிரஸ்-க்கு பிடிக்கவில்லை.
கடுமையான, பெரிய முடிவுகளை பாஜக அரசு எடுத்ததால்தான் உலகளவில் நாம் உயர்ந்தோம். பாஜக அரசு கொண்டு வந்த
உங்களால் தான் இது நடக்கிறது. இதைத்தான் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸால் ஜீரணிக்க முடியவில்லை.


நாட்டில் உறுதியற்ற தன்மையும் அராஜகத்தையும் பரப்ப காங்கிரஸ் விரும்புகிறது. இதற்காக காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக வெளிப்படையாக சதி செய்யும் வெளிநாட்டவர்களுடன் காங்கிரஸ் துணை நிற்கிறது. மத்திய பிரதேச மக்கள் காங்கிரஸிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


காங்கிரஸால், நாட்டின் பிரச்னைகள், குறிப்பாக ஏழைகளை கொள்ளையடிப்பது மோசமானது. மத்திய அரசில் இருந்து அனுப்பப்படும் 1 ரூபாயில் 15 பைசா மட்டுமே பயனாளிக்கு சென்றடைந்ததாக அக்கட்சியைச் சேர்ந்த பிரதமர் ஒருவரே ஒருமுறை ஒப்புக்கொண்டார்" என்றார்.