பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.


ராமர் கோயில் கும்பாபிஷேகம்:


கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


மாதுரி தீட்சித், அனுபம் கெர், அக்‌ஷய் குமார் மற்றும் பிரபல இயக்குனர்கள் ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் லீலா பன்சாலி, ரோஹித் ஷெட்டி, தயாரிப்பாளர் மகாவீர் ஜெயின் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால், தனுஷ் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் நோக்கில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என பொது மக்களை பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார். புதிய விமான நிலையத்தை தொடங்கி வைப்பதற்காக அயோத்திக்கு சென்ற பிரதமர் மோடி, பேரணி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், "உலகமே, ஜனவரி 22ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறது.


இன்று ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. இந்த உள்கட்டமைப்பு பணிகள், நவீன அயோத்தியை நாட்டின் வரைபடத்தில் மீண்டும் நிறுவும். இன்றைய இந்தியா, புனித யாத்திரை தலங்களை அழகுபடுத்தி வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில் இந்தியா மூழ்கியுள்ளது.


மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி:


உலகில் எந்த நாடாக இருந்தாலும், வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்றால், அது தனது பாரம்பரியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். சின்ன கூடாரத்தில் ராம் லாலா (குழந்தை ராமர் சிலை) இருந்தது. இன்று, ராம் லாலாவுக்கு மட்டுமல்ல, நாட்டின் 4 கோடி ஏழைகளுக்கும் வீடு வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியின் வளர்ச்சி இங்குள்ள மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.


வந்தே பாரத் ரயில்கள், நமோ பாரத் ரயில்களுக்குப் பிறகு, நாட்டிற்கு புதிய ரயில்கள் கிடைத்துள்ளன. இதற்கு அம்ரித் பாரத் ரயில்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மூன்று ரயில்களின் சக்தியும் இந்திய ரயில்வேயின் வளர்ச்சிக்கு உதவும். இங்கு பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு, இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.


இதை மனதில் வைத்து நமது அரசு அயோத்தியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு அயோத்தியை ஸ்மார்ட்டாக்கி வருகிறது. இன்று அயோத்தி தாம் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை திறந்து வைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி பெயர் சூட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


ராமாயணத்தின் மூலம் ராமரின் படைப்புகளை நமக்கு அறிமுகப்படுத்தியவர் மகரிஷி வால்மீகி. அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். ஜனவரி 22 அன்று நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக அயோத்திக்கு வர அனைவருக்கும் விருப்பம் உள்ளது. ஆனால், எல்லோராலும் வர இயலாது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, அனைத்து ராம பக்தர்களும் ஜனவரி 22 ஆம் தேதி முறையான நிகழ்ச்சியை முடித்தவுடன், அவர்கள் தங்கள் வசதிக்கேற்ப அயோத்திக்கு வர வேண்டும் என்றும், ஜனவரி 22 ஆம் தேதி அயோத்திக்கு வருவதில் உறுதியாக இருக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.