ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1 முதல் தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் பிளாஸ்டிக் தட்டு, கப்புகள், ஸ்ட்ரா, சிகரெட் அட்டைகள், 100 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட எந்தெந்தப் பொருட்களுக்குத் தடை என்ற விவரம் வெளியாகி உள்ளது.


கடந்த 2019ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். 


அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை அடுத்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


இந்நிலையில்  எந்தெந்தப் பொருட்களுக்குத் தடை என்ற விவரம் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உறுப்பினர் செயலர் பிரசாந்த் கார்கவா கூறியுள்ளதாவது:


'' * பிளாஸ்டிக் குச்சிகளைக் கொண்ட இயர் பட்ஸ், 
* பிளாஸ்டிக் கொடிகள், 
* பிளாஸ்டிக் குச்சிகளைக் கொண்ட பலூன்கள், 
* மெழுகுவர்த்திகள், 
* ஐஸ்க்ரீம் குச்சிகள், 
* தெர்மாகோல்,
* பிளாஸ்டிக் கோப்பைகள், கப்புகள்
* பிளாஸ்டிக்கால் ஆன ஸ்பூன், ஸ்ட்ரா, ஃபோர்க், கத்திகள், ட்ரேக்கள், 
* பிளாஸ்டிக் அட்டைகள்,
* இனிப்புப் பொட்டலங்களை மூடும்போது பேக்கிங்கில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பூச்சு, 
* பிளாஸ்டிக் வரவேற்பு அட்டைகள் (invitation cards),
* சிகரெட் அட்டைகள்
* 100 மைக்ரானுக்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் 


ஆகியவற்றின் உற்பத்தி, விநியோகம், விற்பனைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது. 





அதேபோல கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் 50 மைக்ரானில் இருந்து 75 மைக்ரானாக அதிகரிக்கப்பட்டது. 2022 டிசம்பர் 31-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் 120 மைக்ரானாக அதிகரிக்கப்பட உள்ளது.


அனைத்து பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள், மின்னணு வணிக நிறுவனங்கள், கடைக்காரர்கள், பள்ளி, மருத்துவமனை, வணிக வளாகம், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கும் இது தெரிவிக்கப்படுகிறது. 


இந்தத் தடையை மீறுவோர் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ன்படி, அபராதம், பொருட்கள் பறிமுதல், சம்பந்தப்பட்ட நிறுவனத்தையே மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்''. 


இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் 2019 ஜனவரி 1 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பிளாஸ்டிக் பொருட்கள், தடை, அவற்றுக்கான மாற்று குறித்து விரிவாக அறிய: https://tnpcb.gov.in/PPFTN/tamil/faq.php


*


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண