ஆந்திரா மாநிலத்தின் திருப்பதி மக்களவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக, கடந்த 3-ந் தேதி பவன் கல்யாண் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, அவர் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் என பலரையும் நேரில் சந்தித்தார். அவரைச் சந்தித்தவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது பின்னர் தெரிய வந்தது.




இதையடுத்து, நடிகர் பவன் கல்யாணுக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று முடிவு வந்தது. இருப்பினும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் பவன் கல்யான் தன்னை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில், பவன் கல்யாணுக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


நடிகர் பவன் கல்யாணுக்கு பிரபல மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தகவல்கள் அனைத்தையும் அவரது ஜன சேனா கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சமீபத்தில் அவர் நடித்த வக்கீல் சாப் திரைப்படம் ஆந்திராவில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.