நீரிழிவு நோய், இதய நோய்கள், கல்லீரல் நோய்கள் முதலானவற்றைக் குணப்படுவதாகக் கூறி மருந்து நிறுவனம் ஒன்று மேற்கொண்ட விளம்பரங்களை எதிர்த்து கேரள மருத்துவர் ஒருவர் வழக்கு தொடுத்ததையடுத்து, அந்த விளம்பரங்கள் பின்வாங்கப்பட்டுள்ளன. கேரளாவில் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துடன் தொடர்புடைய கோழிக்கோடு திவ்யா பார்மசி என்ற நிறுவனம் சில ஆயுர்வேத தயாரிப்புகள் பற்றிய விளம்பரங்களைப் பின்வாங்கியுள்ளது. 


1954ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் மந்திர நோய்தீர்ப்பு பொருட்கள் தவறான விளம்பரங்கள் சட்டத்தின்படி, இந்த விளம்பரங்கள் ஆட்சேபனைக்குரியதாகவும், தவறாக வழிநடத்துவதாகவும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, `இந்த விளம்பரங்களின் வெளியீட்டை உடனடியாக எங்கள் நிறுவனம் நிறுத்திவிட்டது’ என கோழிக்கோடு திவ்யா பார்மசி நிறுவனம் சார்பில், உத்தராகாண்டில் உள்ள ஆயுர்வேதம் மற்றும் யுனானி சேவைகளுக்கான உரிமம் வழங்கும் அதிகாரிக்குக் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த கண் மருத்துவரான மருத்துவர் கே.வி.பாபு, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் வெளியிட்ட இந்த மூன்று விளம்பரங்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். கடந்த மார்ச் 1 அன்று, கே.வி.பாபு தனது புகார் மீதான நடவடிக்கை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து, அவர் புகார் தெரிவித்திருந்த விளம்பரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கடந்த ஏப்ரல் 19 அன்று அவருக்குப் பதில் வழங்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து பேசிய மருத்துவர் கே.வி.பாபு, `சில நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறி மருந்துகளை விளம்பரப்படுத்த முடியாது.. இந்த விளம்பரங்கள் பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. எனவே, இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாளர் ஜெனரல் வி.ஜி.சோமானிக்குக் கடந்த பிப்ரவரி 24 அன்று, புகார் அளித்தேன். அதில் ஒரு விளம்பரத்தில் காட்டப்படும் தயாரிப்பு ஒன்றி இதயப் பிரச்னைகளையும் ரத்த அழுத்தத்தையும் சரிசெய்வதோடு, கொழுப்பு அளவை ஒரே வாரத்தில் குறைப்பதாகவும் கூறியிருந்ததைச் சுட்டிக் காட்டியிருந்தேன்’ எனக் கூறினார். இந்தப் புகார்க் கடிதம் தொடர்ந்து ஆயுஷ் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 



கடந்த ஜனவரி மாதம், கொரோனாவைக் குணப்படுத்துவதாகக் கூறி, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் வெளியிட்ட `கொரோனில்’ என்ற மருந்து பற்றி யோகா சாமியார் பாபா ராம்தேவ், அவரது வர்த்தகப் பங்குதாரர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் மீது காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பூனே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தப் புகாரில் `கொரோனில்’ மருந்து குறித்து பொதுவெளியில் கொரோனாவுக்கு எதிரான மருந்து என விளம்பரப்படுத்தியது பற்றிய பாபா ராம்தேவ், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் முதலானவை கேள்வி எழுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.