ரயிலின் கழிவறை கதவை 6 மணி நேரம் பூட்டிக் கொண்டுள்ள ஒருவர் உள்ளே இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.
ரயிலில் தொடரும் பிரச்னை
இந்திய ரயில்வே துறை மிகப்பெரிய நெட்வொர்க் ஆக இயங்கி வருகிறது. பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் மின்சார ரயில் சேவை உள்ளது. இதேபோல் மற்ற மாநிலங்களிலும் மெட்ரோ, மோனோ ரயில் சேவையும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், தேஜஸ், வந்தே பாரத் என பல வகைகளில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறைந்த கட்டணம், விரைவான பயணம் என பலரும் ரயில்களை விரும்புகின்றனர்.
அதனால் ரயில்களில் டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது. 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என்ற நிலை இருக்கும்போது போட்டிப் போட்டு கொண்டு பயணிகள் முன்பதிவு செய்கின்றனர். இத்தகைய பயணிகளில் சிலர் மது பிரியர்களாக உள்ளனர். ரயில் பயணத்திற்கு வரும்போது மது அருந்து விட்டு பயணிக்கின்றனர். சிலர் குளிர்பானங்களில் கலந்து கொண்டு கைகழுவும் இடம், பாத்ரூம் ஆகிய இடங்களில் குடிக்கிறார்.
அதேசமயம் சிலர் கழிவறையில் புகைபிடிக்கவும் செய்கிறார்கள். ஆனால் ரயில்களில் புகை பிடிப்பது, மது அருந்துவது, மது அருந்தி விட்டு பயணம் செய்வது ஆகியவை குற்றச் செயல்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு தொந்தரவாக இல்லாத வரை மது அருந்து விட்டு பயணிப்பவர்களுடன் சகித்துக் கொண்டு சக பயணிகள் தங்களுடைய இடங்களுக்கு செல்கின்றனர். இன்னும் சிலர் டிக்கெட் எடுக்காமல் பரிசோகதரிடம் சிக்காமல் இருக்க கழிவறையில் ஒளிந்து கொள்கிறார்கள்.
வைரலாகும் வீடியோ
இந்த நிலையில் இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ ஒன்றில் ரயில் ஒன்றில் கழிவறையை ஊழியர்கள் உடைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதாவது அந்த கழிவறை சுமார் 6 மணி நேரம் திறக்க முடியாமல் இருந்துள்ளது. இதனால் ஒரு கழிவறையை மட்டும் அந்த பெட்டியில் பயணித்த அனைத்து பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அவர்கள் ஊழியர்கள் உதவியுடன் அந்த கழிவறை கதவை கடப்பாரை கொண்டு உடைக்கின்றனர். முதலில் உள்ளே யாரும் எதுவும் தவறான முடிவு எடுத்திருக்கிறார்களோ அனைவரும் பயந்து விட்டனர்.
ஆனால் கதவை உடைத்தால் ஒருவர் தள்ளாடியபடி வருகிறார். அவர் மதுபோதையில் இருந்தாரா, அல்லது டிக்கெட் எடுக்காமல் பயணித்தாரா என்ற விவரம் வெளியாகவில்லை. இந்த வீடியோ ஒரு மாதத்துக்கு முன்னால் எடுக்கப்பட்டது என்றாலும் கழிவறை என்பது பயணிகளுக்கு அவசியமான அடிப்படை வசதி என்பதை மனதில் கொண்டு அவர்களை அலைகழிக்காமல் செயல்பட வேண்டும் என நெட்டிசன்கள் அறிவுறுத்தியுள்ளனர்.