நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் இரு அவைகளும் டிசம்பர் 18 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதாகைகளை ஏந்தி எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. 


நேற்று முன்தினம் (டிசம்பர் 13) நாடாளுமன்றத்தில் வழக்கமாக குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மதியம் 1 மணியளவில் திடீரென பார்வையாளர் மாடத்தில் இருந்த இரு இளைஞர்கள் மக்களவைக்குள் குதித்தனர். அவர் கைகளில் வண்ணங்களை வெளியேற்றும் வெடிமருந்து குப்பிகளை வைத்திருந்தனர். எம்.பி.,க்கள் இருக்கைகள் வழியே சபாநாயகர் இருக்கையை நோக்கி செல்ல முயன்ற அவர்களை சக எம்.பி.,க்கள் பிடித்து சரமாரியாக தாக்குதல் நடத்தி பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். 


தொடர்ந்து நாடாளுமன்றத்தின் வெளியே  இரு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு ஒரு வார காலம் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாடாளுமன்றத்தில் அத்துமீறி இளைஞர்கள் நுழைந்த விவகாரம் தொடர்பாக தேசிய, மாநில அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.





இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத்தில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என நேற்றைய தினம் முழக்கமிட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை திரும்ப பெற வலியுறுத்தி இன்று எம்.பி.,க்கள் முழக்கத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் 2  மணி ஒத்திவைக்கப்பட்டது. இப்படியான நிலையில் 2 மணிக்கு மீண்டும் அவை நேரம் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் முழக்கத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. 


நாளை, நாளை மறுநாள் விடுமுறை தினம் என்பதால் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இனி டிசம்பர் 18 ஆம் தேதி காலை  தான் தொடங்கும். அன்று காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.