ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இன்று நாடாளுமன்றம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எம்.பி-க்கள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.


பட்ஜெட் கூட்டத்தொடர்:


நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. இரண்டு கட்டங்களாக நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.


இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதி கூட்டத்தொடர் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் நிகழ்வுகள் தொடங்கிய உடனே லண்டனில், இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம் பற்றி ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். 


மேலும் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர் அமளிக்கு வழிவகுத்ததால் நாள் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. 


மேலும் எதிர்க்கட்சிகள் அதானி விவாகாரம் குறித்து கேள்வி எழுப்பியும் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடங்கின.






அதையடுத்து, இன்று இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், பிரதமர் மோடி மூத்த மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.